2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'ஓய்வூதியத்துக்காக காத்திருக்கும் நிலைமை'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், தங்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது என இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அச்சங்கத்தின் செயலாளர் ஏ.எம்.எம்.முக்தார்  இன்று வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகஸ்தர்கள் ஓய்வுபெறும் தினத்தில் சேவைக்கால பணிக்கொடை மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவையும் பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை கடந்த சில வருடங்களாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு கீழ் கடமையாற்றிய ஆசிரியர்கள், ஓய்வுபெற்று 3 மாதங்களுக்குள் தங்களின்  ஓய்வூதியத்தை பெறும் நிலையில்,  ஆசிரியர்களின் ஓய்வூதியத்துக்காக ஒப்பமிட்ட அதிகாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.  
இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கான ஓய்வூதியக் கோவையானது மாகாணக் கல்வித் பணிப்பாளர், மாகாணக் கல்விச் செயலாளர், மாகாணப் பிரதம செயலாளர், மத்திய கல்வி அமைச்சின் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டு, அதே வழியாக அவர் கடமையாற்றும் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்நடைமுறை காரணமாகவே தாமதம் ஏற்படுகின்றது.

இந்நடைமுறையை மாற்றி, விரைவாக ஓய்வூதியம் வழங்கும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், மாதாந்த ஓய்வூதியம் கிடைக்கும்வரை 70 சதவீத இடைக்காலக் கொடுப்பனவை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X