2025 மே 21, புதன்கிழமை

'முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் அணுகுமுறை முன்னெடுக்கப்படுகிறது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

இலங்கையில் முஸ்லிம்களுக்காக தற்போதிருக்கும் பலமான அரசியல் சக்தியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்துவதன் மூலம்  முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் அணுகுமுறை  பல தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்படுவதாக மு.கா.வின் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

நாட்டை ஆண்டவர்கள் தொடக்கம் ஆயுதம் ஏந்தியவர்கள்வரை இம்முயற்சிகளை நீண்டகாலமாகச் செய்து வருகின்றனர். அவ்வாறு பலவீனப்படுத்துவதன் மூலம் தமது நலன்களை இலகுவாக நிலை நிறுத்த முடியுமென்பதை அவர்கள் நன்றாக உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாலமுனைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மு.கா.வின் மாநாட்டுக்கு இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதற்கான கலந்துரையாடல், அக்கரைப்பற்றுப் பிரசேத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுவரை நகர முற்படும் இக்காலகட்டத்தில், முஸ்லிம்களின் பலமான இயக்கமான முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். தெற்கிலுள்ள அரசியல் நிலவரத்தையும் வடக்கிலுள்ள எதிர்பார்ப்புகளையும் குழப்பிக்கொள்ளாமல், நிதானமான அணுகுமுறையினூடாக முஸ்லிம் சமூகம் தனது அபிலாஷைகளை முன்கொண்டு செல்ல வேண்டுமென்ற முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் முதிர்ச்சியை, முஸ்லிம் காங்கிரஸ் பற்றி விமர்சனங்களை முன்வைப்போர் புரிந்துகொள்ள வேண்டும்.

கத்திக் கலவரம் உண்டாக்கி முஸ்லிம்களை இரட்டைப் பெரும்பான்மையின் எதிரிகளாக்கிக் கொள்ளாமலும் சாத்தியமற்ற விடயங்களில் அதிகம் சச்சரவுகளை ஏற்படுத்திக்கொள்ளாமலும் நிதானமாக நகர்ந்து செல்ல முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறை உணரத் தலைப்பட வேண்டும்' எனவும் அவர்  கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .