2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பட்டதாரிகளுக்கான நியமனத்தில் 2010, 2011 இல் பட்டம் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக விசனம்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (ஹனீக் அஹமட்)
அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் 2010, 2011 ஆண்டுகளில் பட்டங்களை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் அம்பாறை மாவட்டத்தில் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பில் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் தனது கவலையினையும் விசனத்தையும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் இந்நியமனம் வழங்களின்போது, விண்ணப்பதாரிகள் பட்டம் பெற்றுக் கொண்ட ஆண்டு கருத்திற் கொள்ளப்படவில்லை என்றும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் மேற்படி விடயம் தொடர்பில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 16.02.2012 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் பத்திரிகை விண்ணப்பத்தின் மூலம் வேலையற்ற சகல பட்டதாரிகளும் மேற்படி நியமனத்துக்காக விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் பட்டம் பெற்ற திகதி மற்றும் வயது என்பன வரையறுத்துக் கூறப்படவில்லை. இதன் காரணமாக, சகல பட்டதாரிகளும் இந்நியமனத்துக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 28, 29ஆம் திகதிகளிலும் இம்மாதம் 7 ஆம் திகதியிலும் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற நேர்முகத்தேர்வுக்கு 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பட்டங்களைப் பெற்றுக்கொண்ட பட்டதாரிகளும் சமுகமளித்திருந்தனர். ஆனால், நியமனம் வழங்குவதில் அவர்களில் எவருக்கும் நியமனம் கிடைக்கவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியதொரு நடவடிக்கையாகும்.

வயது கூடிய பட்டதாரிகளும், திருமணமாகி தமது கைக்குழந்தைகளுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பெண்களும் கூட, நியமனம் வழங்கலில் புறக்கணிக்கப்படுள்ளமையானது கவலை தருகின்றது.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு அதாவது 6 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறான பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்படும் நிலையில், இவ்வாறு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளமையினை நாம் கண்டிக்கின்றோம்.

அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தின் போது விண்ணப்பதாரிகளின் வயது மற்றும் அவர்கள் பட்டம் பெற்றுக் கொண்ட ஆண்டு உள்ளிட்ட எந்த விடயங்களையும் கருத்திற்கொள்ளாமல், பட்டம் பெற்ற அனைவருக்கும் நியமனங்களை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ஏனைய மாவட்டங்களில் பட்டம் பெற்றுக் கொண்ட ஆண்டு மற்றும் விண்ணப்பதாரிகளின் வயது போன்றவற்றினைக் கருத்திற்கொள்ளாமல் மேற்படி பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஏன் இந்த பாகுபாடான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என நாம் கேட்க விரும்புகின்றோம். இது பற்றி அம்பாறை மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதிப்பது மேலும் கவலைக்குரிய விடயமாகும்.

அந்தவகையில் 2010, 2011 ஆம் ஆண்டு பட்டங்களை பெற்றவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், வீதியில் இறங்கி பாரிய போராட்டத்தை மேற்கொள்வதற்கும், நீதிமன்றம் சென்றாயினும் எங்களுக்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தயாராகவுள்ளோம்.

இவ் விடயத்தில் இம்மாவட்ட அரசியல்வாதிகள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் எங்களுக்கு பக்கபலமாகவிருந்து உதவிபுரிய வேண்டும்.

எனவே, எங்களின் நிலையை நன்கு உணர்ந்து மிக விரைவில் இந்நியமனத்தை வழங்க உரிய அதிகாரிகளும், அமைச்சும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென எமது ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.                                                                                                                                                                                                 

You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 15 June 2012 11:34 AM

    பட்டதாரிகளே பயம் வேண்டாம் மாகாண சபை கலைப்பின் முன்னர் நியமனம் கிடைக்கும் .....இருந்தாலும் விழிப்பாக இருங்கள்.

    Reply : 0       0

    Rajee Saturday, 16 June 2012 06:38 AM

    பட்டதாரிகளின் நலனுக்காக குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். நியாயமான நடவடிக்கைகளுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கவும், பாரபட்சத்துக்கு எதிராக போராடுவோம். செய்தியை பிரசுரித்தமைக்காக எங்களது ஒன்றியத்தின் சார்பாக குறித்த ஊடகவியாலாளருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கின்றோம் .... ஐயா உங்களது பணி தொடரட்டும்

    Reply : 0       0

    Mohamed Siya Saturday, 16 June 2012 06:54 AM

    பட்டதாரிகள் பயிலுனர் நியமனத்தில் நியாயம் கிடைக்க இச்செய்தி வெளியிட்டமைக்கு நன்றிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .