2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு 3 மாதமாக எரிபொருள் மானியம் வழங்கப்படாமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை பிரதேசத்திற்கு உட்பட்ட இயந்திரப்படகு மீன்பிடியாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கும் நடவடிக்கைகள் கடந்த 3 மாதகாலமாக பூரணமாக நடைமுறைப்படுத்த தவறியமைக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் ஒன்று கல்முனை கடற்றொழில் நீரியல்வள திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள் பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.செல்வராஜாவிடம் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.நஸீர் மகஜர் ஒன்றை கையளித்தார்.
சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரின் பிரதி ஒன்று கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.நஸீர் தெரிவிக்கையில், எமது சங்கத்தைச் சேர்ந்த 271 மீன்பிடி இயந்திரப்படகுகளுக்கான எரிபொருள் மானியம் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் இதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகவும் கூறினார்.

இதேவேளை, கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.செல்வராஜாவிடம் இது தொடர்பில் கேட்டபோது,
இந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பாக உள்ள மீன்பிடி பரிசோதகரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய தாம் எரிபொருள் மானியத்தை வழங்கினோம். ஆயினும் இது தொடர்பாக குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை தற்போது ஆராய்ந்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .