2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் மழை குறைவு: தொடர்ந்து மக்கள் அவலநிலையில்

Super User   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் இன்று மழை ஓரளவு குறைந்துள்ள போதிலும் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான துறைநீலாவனையை  சுற்றியுள்ள நீர் நிலைகள் பெருக்கெடுத்துள்ளன. இதனால், இப்பிரதேசத்தின் கண்ணகியம்மன் ஆலயம் முற்றாக வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதோடு, அதன் சுற்றுமதில்களும் இடிந்து விழுந்துள்ளன.

இதேவேளை, மருதமுனைப் பகுதியின் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமலுள்ளதால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை முகம்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சுனாமி வீட்டுத் திட்டங்கள் அமைந்துள்ள மேட்டுவட்டை பகுதியில் வெள்ளம் இன்னும் வடியாத நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் கடலுக்கும் - நிலத்துக்கும் இடையிலான பகுதிகள் உடைப்பெடுத்துள்ளன. நிலப்பகுதியிலிருந்து கடலினை நோக்கி வெள்ள நீர் வேகமாக நகர்ந்து வருகின்றமையினையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வெள்ளம் ஓரளவு வடிந்து வரும் நிலையில் - தமது குடியிருப்புக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே தாம் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக, பாண்டிருப்பு மேட்டுவட்டைப் பகுதி – சுனாமி வீட்டுத்திட்டக் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு மேட்டுவட்டைப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் - வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து தற்போது பாண்டிருப்பு ஹிந்து மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தினால் மூழ்கியிருந்த இவர்களின் குடியிருப்புப் பகுதியில் தற்போது நீர் ஓரளவு வடிந்து வருகின்ற போதிலும், குடிநீர் வசதியின்மை மற்றும் பாம்புகளின் அச்சம் காரணமாகவே தாம் இன்னும் நலன்புரி நிலையத்தில் தங்கியிருப்பதாக இருவர்கள் கூறுகின்றனர்.

வீடுகளுக்குள் இருந்து கொண்டேனும் தனது உணவினைச் சமைத்து உண்பதற்கு, குடிநீர் வசதிகள் இல்லையென்றும், இதனால் - நீண்ட தூரம் பயணித்தே தமக்கான குடிநீரைப் பெறவேண்டியுள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வெள்ளத்தின் காரணமாக - இப்பகுதியில் பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களாக இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சிலர் பாம்புக்கடிக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .