2025 ஜூன் 26, வியாழக்கிழமை

உட்கட்டுமான வேலைத்திட்ட முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்களை பகிரும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 23 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேசங்களில் அரசாங்கம் மற்றும் அரசியல்த் தலைவர்களுடன் சமூக நல்லாட்சி ஊடான உட்கட்டுமான வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் செயலமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பாம் பவுண்டேசன் நிறுவனமும் பிரக்டிக்கல் அக்ஷசன் நிறுவனமும் இணைந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கல்முனை கிறிஸ்தவ இல்ல மண்டபத்தில் இச்செயலமர்வை நடத்தியது.

பாம் பவுண்டேசன் திருக்கோவில் பிரதேச கள இணைப்பாளர் மஞ்சுளா வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வின் நோக்கங்களை பாம் பவுண்டேசன் நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.பாஸ்கரன் வழங்கினார்.

நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் கலையரசன், இரு பிரதேசசபைகளின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நிறுவனங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதேவேளை, பாம் பவுண்டேசன் நிறுவனத்தால் இரு பிரதேசங்களிலும் ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சகல தகவல்களையும் உள்ளடக்கி புத்தக வடிவில்  ஆவணமாக்கப்பட்ட ஆவணப் புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.  நாவிதன்வெளி பிரதேசசபை ஆவணப்புத்தகத்தை பிரதேசசபை தவிசாளர் கலையரசனிடம்,  நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.பாஸ்கரனும் திருக்கோவில் பிரதேசசபை ஆவணப் புத்தகத்தை பிரதேசசபை உறுப்பினர்களிடம்,  கள இணைப்பாளர் மஞ்சுளா வீரசிங்கவும் வழங்கினர்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் க.கலையரசன் உரையாற்றுகையில், 

இந்த நாட்டிலே கட்சி ரீதியான இன ரீதியான பாகுபாடு இருக்கும் வரைக்கும் எந்த நல்லாட்சி வேலைத்திட்டங்களும் வெற்றி பெற முடியாது.  அரசியல்த் தலைவர்களின் மனப்பாங்கு மாறவேண்டும். அவ்வாறு மாறும் பட்சத்தில் நல்லாட்சி வேலைத்திட்டங்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் சிறந்த முறையில் நடைபெறும்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் பாம் பவுண்டேசன் நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் பல அபிவிருத்தி வேலைகளை செய்துள்ளனர். இந்த வேலை நிமித்தம்  தாமாகவே மக்களை ஒன்றிணைத்து சில அமைப்புக்களை உருவாக்கி அமைப்பு ரீதியாக
நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பாம் பவுண்டேசன் ஒரு சிறந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

எமது பிரதேச சபையைப் பொறுத்தளவில் நாங்கள் மக்கள் அடிப்படை அமைப்புக்கள் மற்றும் பிரதேசமக்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து மக்களால் முன்னிறுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.  ஆனால் அரசாங்கத்தினால் செயல்படுத்துகின்ற திட்டங்கள் என்பது நல்லாட்சி வேலைத்திட்டமாக நடைபெறுவது என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
 
இந்த நாட்டிலே பல அரசாங்கத் திணைக்களங்கள் இருக்கின்றன. ஆனால் எங்களுடைய பிரதேசத்திலே எங்களுக்கு தெரியாமல் சில வீதிகளை அபிவிருத்தி செய்கின்ற நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

இப்பிரதேசம் 1954ஆம் ஆண்டிற்கு பின்னரே குடியேற்றப்பட்ட கிராமங்களாகும். ஆனால் கடந்த வன்செயல்களினால் மிகவும்
பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் சுகாதரம், குடிநீர், வீதி, வீடுகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நாங்கள் அபிவிருத்தி செய்திருக்கின்றோமா எனக் கேட்டால் இல்லை எனத்தான் செல்லவேண்டும். ஏன் என்றால் பிரதேச சபைக்கு வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா தொடக்கம் 20 இலட்சம் ரூபாவரையில் தான் நிதி கிடைக்கின்றது. அவ்வாறு வருகின்ற நிதியை மக்கள் அடிப்படை அமைப்புக்களை அணுகி அவர்கள் முன்னிறுத்துகின்ற வேலைத்திட்டத்தை பிரதேச சபை உருவாகிய காலம் தொட்டு இன்றுவரை செய்து வருகின்றோம்.

ஒரு நல்லாட்சியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பாம் பவுண்டேசன் நிறுவனத்தால் செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செய்து வருகின்றனர். அவர்களுக்கு எமது பங்களிப்பை  வழங்கியுள்ளோம். அதனால் அவர்கள் பிரதேசத்தில் மக்கள் அமைப்புக்களால் முன்னிறுத்தப்பட்ட 20 குளங்களை புனரமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், பிரதேசசபை, மாகாணசபை போன்றவை சில உதவிகளை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திட்டம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் 50 வீதமான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .