2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும்: கல்முனை பிரதி மேயர்

Super User   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஆர்.அஹமட்)

தமிழ் பேசும் முஸ்லிமாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் தமிழராக இருந்தாலும் சரி இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளரும் கல்முனை பிரதி மேயருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மஹ்மூத் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"நமது சமூகத்தின் எதிர்கால அரசியலைப் பற்றி சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தின் ஆங்கிலக் கல்வி பற்றியும் அரசியல் பற்றியும் மறைந்த தலைவர் அஷ்ரப் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அதற்கான காரணம், கிழக்கிலிருந்து கல்வி ரீதியாகவோ அரசியல் ரீயாகவோ தலைமைத்துவம் போனால் மட்டக்களப்பான் என்று மட்டம் தட்டும் ஒரு காலம் இருந்தது.

இத்தகையதொரு கால கட்டத்தில் தான் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி முழு நாட்டுக்கும் தலைவர் அஷ்ரப் தலைமைத்துவம் கொடுத்தார். எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் புதிய அரசியல் தலைமைகள் உருவாக வேண்டுமென்று ஒரு புது யுகத்தினை தோற்றுவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல் தலைமைத்துவம் பற்றி முழு உலகிற்கும் அவர் எடுத்துக் காட்டினார். தலைவர்களை உருவாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவ்வாறானதொரு காலத்தில் அவர் எங்களை விட்டு மறைந்து விட்டார்.

ஆயினும் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமை ஒரு கல்விமானாக அடையாளங் கண்ட அவர் இந்தக் கட்சியை முன் எடுத்துச் செல்வதற்கான தேவையைக் கருதி தேசியப் பட்டியல் மூலம் ரவூப் ஹக்கீமை நாடாளுமன்ற ஊறுப்பினராக்கினார். தற்போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். தலைவர் அஷ்ரப் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சேகு இஸ்ஸதீனை முதலமைச்சராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு மாகாண சபைத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்தினார்.

இன்றைய சூழ்நிலை சற்று வித்தியாசமாகக் காணப்படுகின்றது. அன்று பயங்கரவாத சூழ்நிலை. இன்று பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட சூழ்நிலை. தமிழரசுக் கட்சி மூலம் தமது அரசியலை ஆரம்பித்த தலைவர் அஷ்ரப், பயங்கரவாதத்தின் பின்னர் தான் முஸ்லிம்களுக்கான தனிப் பாதையை தெரிவு செய்தார்.

தமிழ் முஸ்லிம் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதேயன்றி, அரசாங்கத்தில் இருந்து கொண்டு அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்வதற்காவோ அல்லது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை.

இந்தப் பாடத்தினை தலைவர் அஷ்ரப் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவர்கள் தமது சமூகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் முஸ்லிம் காங்கிரஸ்.

கடந்த ஐந்து வருடங்களாக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஒரு தமிழ் சதோதரர் இருந்து வருகின்றார். இந்த சூழலில் நடைபெறவுள்ள தேர்தல், மாறுட்ட சூழ்நிலையில் நடைபெறவுள்ளது. மாகாண சபை உருவாக்கபட்டதன் பின்பு தமிழர்களின் ஆதரவை பெரிதும் பெற்றுள்ள தமிழ் பிரதிநிதிகள் பங்குபற்றும் முதலாவது தேர்தலாக இது இருக்க போகின்றுது.

மாகாண சபை இப்பிரதேச மக்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பிரதேசத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவை. இப்பிரதேசத்திற்கான சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதனைப் பூர்த்தி செய்வதற்காவே இந்த மாகாண சபை உருவாக்கப்பட்டது.

ஆதலால், தமிழ் பேசும் முஸ்லிமாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் தமிழராக இருந்தாலும் சரி இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தான் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக வர வேண்டுமென்தனை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும். இப்போது மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவை முறியடிப்பதற்கான பல சதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிங்கள இனவாதிகள் தங்களின் சூழ்ச்சிகளின் மூலமாக இந்த மண்ணையும் தாங்கள் ஆள வேண்டும் என்தற்காக காணி,  பொலிஸ் அதிகாரங்களை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களின் இந்த சதியை அரங்கேற்றுவதற்காக ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இரு சமூகங்களையும் பிரிப்பதற்கு திட்டமிட்டுக் கொணடிருக்கின்றார்கள். இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டுமென்ற ஆசை முஸ்லிம்களிடம் இருந்தது. கிழக்கு மாகாண சபையில் தான் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் உருவாகலாம். முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வர முடியும் என்ற நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை முதமைச்சராக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும். அரசியல் ரீதியாக தமிழர்களுடன் இணைந்து இப்பிரதேசத்தினை ஆட்சி செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் .

முன்பை விட கூடிய அதிகாரங்கள் மாகாண சபைக்கு கிடைக்கப் போகின்றன. அததலால் எமது பிரதேசத்ததைச் சேர்ந்த ஒருவரை கிழக்க மாகாண முதலமைச்சராக்குவதற்கு நாம் முயற்சிகளை எடுத்தல் வேண்டும். தமிழ் முஸ்லிம் உறவுகளை கட்டியொழுப்புவதன் மூலமாக இப்பிரதேசத்தை நாங்களே ஆட்சி செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • MAKKAL THONDAN Thursday, 19 April 2012 04:01 AM

    மசூரா அடிப்படையிலா இக்கருத்தை கூறுகிறீர்கள் ?ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் மசூரா அடிப்படையில்தான் முடிவு எடுக்கும் என்று கூறுவது நினைவுக்கு வருவதால் மக்கள் இக்கேள்வியை வினவுகின்றார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .