2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு முதல்வராக அந்த மாகாணத்தவரே வரவேண்டுமென்ற வரையறை இல்லை: எஸ்.எம்.ஏ.கபூர்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

'மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த மாகாண மண்ணில் பிறந்தவராகவோதான் இருக்க வேண்டும் என்கிற நியதிகளோ, வரையறைகளோ இல்லை.

கிழக்கு மகாணத்தில் பிறந்தவர்கள்தான் - அந்த மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று அண்மையில் கூறப்பட்ட கருத்தானது தனிப்பட்ட ஒரு நபரின் அபிப்பிராயமேயன்றி, அது கிழக்கு மக்களின் முடிவல்ல' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளரும் அக்கட்சியின் உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ

'கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதன் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற நிபந்தனையினை தனிநபரொருவர் வெளியிட்டுள்ளார். ஆனால், கிழக்கின் முதலமைச்சராக அந்த மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வரவேண்டும் என்று - கிழக்கு மக்கள் ஒருபோதும் மல்லுக்கட்டியதில்லை. 

கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அரசு சார்பான பொது வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. இது இன்னும் நிச்சயிக்கப்படவில்லை.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டிபோட்டு அமோக வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்றவர். அதேபோன்று திருமலை மாவட்டம் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அம்மாகாண சபைக்கு தெரிவானார்.

எனவே, கிழக்கு மக்களால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மு.கா. தலைவர் ஹக்கீம், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டால் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பும் வசதிகளும் அதிகம் உள்ளன.

இந்த வாய்ப்பானது - ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களை விடவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீமுக்கே அதிகம் உள்ளது. அரசியல் ஆளுமையும், அனுபவமும், எல்லா விதத்திலும் முழுத்தகுதியும், தகமையும் பொருந்தியவர் ஹக்கீம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஆனாலும், இந்த விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசோ, அதன் தலைமைத்துவமோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது வேறுவிடயம்.

மற்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் - பிரதேசவாதங்களுக்கு அப்பால் நின்று செயற்படும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாலும், தமிழ், சிங்கள மக்களாலும் அன்று முதல் இன்றுவரை பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றார்.

பிரதேசவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற மூலமந்திரத்தை முன்னிறுத்தித் தோற்றுவிக்கப்பட்டதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர்  எம்.எச்.எம்.அஸ்ரபின் மறைவுக்குப் பின் கம்பளையில் பிறந்த திருமதி. பேரியல் அஸ்ரப் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டபோது, பேரியல் இஸ்மாயிலுக்கு எதிராக யாரும் பிரதேச வாதத்தினைத் தூக்கிப் பிடிக்கவில்லை.

இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டில் முதலமைச்சரான போது, இலங்கை மண்ணில் பிறந்த ஒருவர் தமிழ் நாட்டின் தலைவனாக எப்படி வரலாம் என்று அங்குள்ள மக்கள் கேட்கவில்லை. இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸின் தலைவியாக வரமுடியாதென இந்திய மக்கள் வரம்பு போடவுமில்லை. இவை உலக அரசியலில் நாம் அறிந்த உதாரணங்களாகும்.

இதேவேளை, பிரதேசவாதங்களுக்கும் சாதிமத பேதங்களுக்கும் அப்பால் நின்று இம்முறை ஒரு முஸ்லிம் முதலமைச்சரை கிழக்கு மாகாணத்தில் பெறுவதற்கு தமிழ் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

ஏனெனில் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தும் அதிக உறுப்பினர்களை அச்சபையில் பெற்றிருந்தும் கூட, தமிழ் சகோதரர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஆதரவை வழங்கினார்கள்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் முஸ்லிம்கள் மதித்து மரியாதை செய்து வந்துள்ளார்கள் என்பதை எவரும் எழிதில் மறந்துவிட முடியாது' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • riswan Wednesday, 18 April 2012 09:58 PM

    பதவிக்கு சண்டை போட்டால் முஸ்லிம்களின் நிலை என்ன? ஹகீம் அணி, அதாவுல்லா அணி, ஹிஸ்புல்லா அணி, முபாரக் அப்துல் மஜீத் மௌலவி அணி, ரிசாத் அணி என்றெல்லாம் முஸ்லிம்களின் பலத்தை உங்களின் பதவி, பண ஆசைகளுக்காக பலியாக்க வேண்டாம்.
    எல்லோரும் உங்களின் பெயர் நிலைக்க வேண்டும் என்றே பாடுபடுகிண்றீர்கள் தவிர முஸ்லிம் சமூகத்துக்காக ஒருமித்த முடிவை எடுக்க பாடுபடவில்லை.

    Reply : 0       0

    zeefa Wednesday, 18 April 2012 10:24 PM

    அதாஉல்லா சார் தான் முதலமைச்சர் ஆக வேண்டும். அவர்தான் கிழக்கை பிரிக்க வேண்டும் என்று சொல்லி பிரித்து காட்டியவர்.

    Reply : 0       0

    nawshad Wednesday, 18 April 2012 11:06 PM

    அட்டளைச்சேனைக்கு தலைவரால் வழங்கிய எம்பி பதவிக்கு என்ன நடந்தது கபூர்? மர்ஹூம் அஷ்ரப் மரணிச்சி பனிரெண்டு வருசமாகி பனிரெண்டு முஸ்லிம் கட்சிகளை உருவாக்கி ஹக்கீம் சாதனை படைத்துவிட்டார் முதல் அமைச்சரானா இன்னும் கொஞ்சம் முஸ்லிம் கட்சி கூடும் கப்பூர் சார். கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஒற்றுமய பழுதாக்காதீங்க சார். பட்ட கஷ்டம் போதும்.

    Reply : 0       0

    meenavan Wednesday, 18 April 2012 11:19 PM

    மு.கா.வின் ஸ்தாபக செயலாளர் உங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராகும் எண்ணமில்லையா? தேசிய பட்டியல் எம்.பி. எனின் இரு கரமேந்தி பெறுவீர்கள் தானே?

    Reply : 0       0

    riswan Thursday, 19 April 2012 02:09 AM

    நமது காலில் நாம் நிற்போம், தேசிய தலைமை வேறு, மாகாண ஆட்சி வேறு - எல்லாத்திற்கும் ஹக்கீம் என்றால் கிழக்கை ஆள ஒருவர் SLMC இல்
    இல்லையா? நீங்கள் என்னுடன் விவாதத்திற்கு தயாரா?

    Reply : 0       0

    mohamed Thursday, 19 April 2012 02:30 AM

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை எடுக்க முடியவில்லை என்றால் அதை விட கேவலம் எதுவும் இல்லை. எந்த அணியாக இருந்தாலும் சரி யாருடைய அணியாக இருந்தாலும் சரி. முதலில் முதலமைச்சர் எடுப்பது எப்படி என்று கொஞ்சமாவது சிந்திக்கவும். இரண்டாவது தடவையும் முடியாமல் போனால் முஸ்லிம் சமூகத்துக்கு அது கடும் சவாலாக அமையும். சிந்தியுங்கள்.

    Reply : 0       0

    AHAMED JUNAID Thursday, 19 April 2012 03:50 AM

    கபூர் அவர்களே நீங்கள் தெரிவித்துள்ள உதாரணங்கள் அனைத்தும் சரி ஆனால் ,தலைவர் ஹக்கீம் அவர்கள் அம்பாறை ,திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற பிரநிதியாக இருந்து மக்களுக்கு எதை சாதித்தார் .இப்பிரதேச மக்கள் அவரை சந்திக்கவே முடியவில்லையே? நக்குண்டார் நாவிழந்தார் என்று சொல்வார்களே அப்படியானவர்களை எப்படி நம்புவது என மக்கள் வினவுகிரார்களே இக்கேள்விக்கு என்ன பதில்?

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 19 April 2012 04:47 AM

    சுயநல வாதிகளுக்கு என்ன பதில் சொல்வது? பதவி ஆசையும் அரசியல் வங்குறோத்தும்தான் தேவையற்ற அறிக்கை இடுவதற்கான காரணம். புரிந்து கொண்டால் சரிதான்.

    Reply : 0       0

    M.H.M.KA Thursday, 19 April 2012 05:55 AM

    தலைவர் அஷ்ரப் குடும்பத்தில் இருந்து யாரும் முஸ்லிம் காங்கிரசின் பெரிய பதவிக்கு வர ஹக்கீம் விடமாட்டார். பார்ப்போம் இன்னும் ஒரு வருடம் இருக்கு. கல்முனை மேயர் ஒப்பந்தம்.

    Reply : 0       0

    Riyas Thursday, 19 April 2012 10:46 AM

    வீட்டுக்குள்ளே இருந்துதான் எல்லாமே வேண்டும் என்றால் ஏன் அடுத்த வீட்டில் இருந்து மட்டும் மாப்பிள்ளையை அல்லது பெண்ணை எடுக்கினம் அதையும் உள் வீட்டிலேயே வைத்து கொள்ளலாம்தானே !!!

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 19 April 2012 01:19 PM

    இந்த கட்சியை ஆரம்பித்த இருவரில் ஒருவர்தான் இந்த சட்டத்தரணி கபூர் அவர்கள். இவர் அமைதியுடன் இருப்பது ஏன் என்பது புரியவில்லை...

    Reply : 0       0

    fayas Thursday, 19 April 2012 01:44 PM

    கபூர் சார் சிறப்பான ஒரு கருத்தை சொல்லியுள்ளார். நிச்சயமாக முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர் தான் இன்ஷா அல்லா முதலமைச்ச.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .