2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாநகர சபை அமர்வுகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள முடியுமா? அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர்

Super User   / 2012 மே 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று மாநகர சபையின் அமர்வுகளில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள – வரியிறுக்கும் மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமான விடயமாகும் எனத் தெரிவித்துள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைரும், மு.கா. உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி - மாநகரசபையின் எதிர்வரும் அமர்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டுமென வேண்டுகோளொன்றினை முன்வைத்துள்ளார்.

"மாநகரசபையின் மாதாந்த அமர்வுகளில் பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதற்கு வகை செய்தல்" எனும் தலைப்பில் 14.05.2012 எனும் திகதியிட்டு, அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளருக்கு எதிர்கட்சித் தலைவர் ஹனீபா மதனி அனுப்பி வைத்துள்ள கடிமொன்றிலேயே மேற்கண்ட வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் ஹனீபா மதனி மேலும் குறிப்பிடுகையில்,

"அக்கரைப்பற்று மாநகர சபையின் அமர்வுகளில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள – வரியிறுக்கும் மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமான விடயமாகும். அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்ற அரசியல் விழிப்புணர்ச்சி காரணமாக, மாநகர சபையின் மாதாந்த கூட்டங்களில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வதற்கு – பொதுமக்கள் ஆவல் கொண்டவர்களாக உள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில், அக்கரைப்பற்று மாநகரசபையின் 05.04.2012 ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள வருகைதந்திருந்த பொதுமக்களில் பலர் - கூட்ட மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாது பொலிஸாரினால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேபோன்று கடந்த 10.05.2012ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தைப் பார்வையிட வந்திருந்தவர்களும் கூட்ட மண்டபத்திலிருந்து இடை நடுவில் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கின்ற மக்களை மிகவும் ஆவேசப்படுத்தியுள்ளன.

எனவே, மாநகர சபை அமர்வுகளில் பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள முடியுமா? முடியாதா? முடியுமெனில், கலந்து கொள்வதற்கான ஒழுங்குகள், விதிகள் யாவை? என்பது போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், 05.06.2012 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநர சபை அமர்வினைப் பார்வையிடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனவே, இவர்கள் சமூகமளிப்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இது தொடர்பில் அக்கரைப்பற்று மேயர் சக்தி அதாவுல்லாவை தொடர்புகொண்டு தமிழ்மிரர் இணையத்தளம் வினவிய போது,

"சபை அமர்வுகளில் வரியிறுப்பாளர்களாகிய பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

எனினும் அக்கரைப்பற்று மாநகர சபையின் சபா மண்டபம் தற்காலிக இடத்திலேயே தற்போது இயங்குகின்றது. இந்த மண்டபத்தில் சிறிய எண்ணிக்கையிலான பொதுமக்களே பார்வையாளர்களாக கலந்துகொள்ள முடியும்" என அவர் பதிலளித்தார்.

"நிரந்த இடத்திற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் சபா மண்டபம் நிரந்த இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் அதிக பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.

அதுவரை, முன் அனுமதி பெற்றவர்கள் மாத்தரமே சபை அமர்வுகளின் பார்வையாளர் கலரியில் அமர முடியும். குறித்த முன் அனுமதியை பெறுதற்காக மாநகர சபை விண்ணப்பிக்க வேண்டும். குறித்த விண்ணப்பம் தொடர்பில் பரீசிலினை செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும்" எனவும் மேயர் சக்கி அதாவுல்லா கூறினார்.                                                                                                                                      

You May Also Like

  Comments - 0

  • tharumi Friday, 25 May 2012 02:13 PM

    மாநகர அமர்வுகளை பார்வையிட விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்களை முன் கூட்டியே விநியோகித்து, அதை நடுநிலையாக பரிசீலனை செய்து உரியவர்களை தெரிவு செய்து, இடவசதி கூடுதலாகவுள்ள அதாவுல்லாஹ் அரங்கில் மாநகர அமர்வுகளை நடாத்த முடியாதா? வரி இறுப்பாலர்களின் நிதியில் சுகம் அனுபவிப்போர் இவ்விடயத்தில் கூடிய சிரத்தை காட்டவேண்டும்? மாநகர மேயேரே தற்காலிக மாநகர சபா மண்டபம் இடவசதி குறைந்தது என குறிப்பிட்டு நழுவல் தன்மையை கடைபிடிக்கவேண்டாம். உடனடியாக அமைச்சரை பிடித்து நிரந்தர மாநகர கட்டிடத்தை நிருமாணிக்க முயலுங்கள்.

    Reply : 0       0

    IBNUABOO Friday, 25 May 2012 02:22 PM

    மேயருடய கூற்று உண்மையானால் எதிர்க்கட்சி தலைவரின் பிரேரணையில் அர்த்தமில்லயே. அது நிற்க, இவர்களையெல்லாம் மாநகர சபைக்கு அனுப்பிய பொதுமக்களுக்கு மாநகர சபைக்கூட்டம் பார்க்க இவ்வளவு தடையா?

    Reply : 0       0

    abdullah Saturday, 26 May 2012 02:29 AM

    உங்கள நாற்காலிக்கு அனுப்ப பொதுமக்களாகிய நாங்க தேவை. ஏன் இந்தக் கொலவெறி? உன்மைகளை ஊர்மக்கள் அறிந்துவிடுவார்கள் என்ற பயமா?

    Reply : 0       0

    Rino Saturday, 26 May 2012 05:58 PM

    இப்ப அனுமதி கிடைக்காது, தேர்தல் காலம் வந்தால் தானாக முன் வந்து பொதுமக்களுக்கு இடவசதி கொடுப்பர்கள்.

    Reply : 0       0

    ahamed Tuesday, 29 May 2012 04:42 PM

    அல் அஸ்ர் - காலம்
    1. காலத்தின் மீது சத்தியமாக!
    2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
    3. விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்குக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .