2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் சந்திக்கும் இழப்புக்கள் சொல்ல முடியாதவை: செஞ்சிலுவைச் சங்கம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் சந்திக்கும் இழப்புகள் சொல்லமுடியாதவை என்று தெரிவித்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கம்,  சாதாரண காலத்தில் தன்னைத் தயார் செய்து ஆபத்துக்காலத்தில் மக்களுக்கு உதவுவதே செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய பணி என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கீழுள்ள போரத்தீவுப்பற்று பிரிவில் அமைந்திருக்கும் பட்டாபுரம் செஞ்சிலுவை அலகிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் மேற்படி அலகுத்தலைவர் த.முருகதாஷன் தலைமையில் பட்டாபுரம் பாலர் பாடசாலைக் கட்டடத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்றது.

இதில், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா, பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அம்பாறை, பட்டாபுரம் கிராம மக்கள், வருடா வருடம் ஏற்படுகின்ற வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அவர்கள்  கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தும் செல்கின்றார்கள். அதன்போது நிவாரணம் வழங்கப்படுகிறது. நிலமை சீரடையும்போது மீண்டும் மக்கள் வீடுகளுக்கு வருகின்றார்கள்.

தொடரந்து இழப்புக்களைச் சந்திக்கும், இந்நிலமை தொடரக்கூடாது, என்பது மக்களாகிய உங்கள் விருப்பமாக இருக்கிறது.

வடிகால், வாய்களுடன் கூடிய வீதிகள் அமைக்கப்படல் வேண்டும் என்பது இக்கிராம மக்களது, கோரிக்கையாக இருக்கின்றது. இம்மக்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியவர்கள் அரசும் அரச தலைவர்களுமாவர். அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவக்கூடும்.

இதுவரைகாலத்திலும் அரச சார்பற்ற பல நிறுவனங்கள் இம்மக்களுக்கு, பல்வேறு விடயங்களில் உதவியுள்ளன. ஆனால், பொதுமக்களது, முக்கிய முதன்மையான தேவைகள் நிறைவு செய்யப்படல் வேண்டும் என்பதை செஞ்சிலுவை இயக்கம் உணர்ந்து கொள்கின்றது. வாய்ப்பும், வசதிகளும் வரும்போது உங்கள் முதன்மையான தேவையை நிறைவு செய்ய செஞ்சிலுவை அமைப்பு ஏனையவர்களுடன் சேர்ந்து முயற்சிகளை மேற்கோள்ளும்.

இருந்தபோதிலும், சாதாரணகாலத்தில் தன்னைத் தயார் செய்து ஆபத்துக்காலத்தில் மக்களுக்கு உதவுவதே செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய பணி. ஆனால் மக்களது பங்களிப்பின்றி அப்பணியை சிறப்பாக செய்ய முடியாது. அதனால் தாமாகவே முன்வந்த கிராமங்களில் செஞ்சிலுவை அலகுகளை அமைத்திருக்கிறோம். மேலும் கோரிக்கை வருகின்ற கிராமங்களில் புதிய செஞ்சிலுவை அலகுகளை அமைத்து வருகின்றோம். அலகுகளினூடாக மக்களின் இயலுமையை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப் பற்று பிரிவின் அங்கத்தவர்கள், பட்டாபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X