2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அட்டாளைச்சேனை சனசமூக நிலைக்கட்டடத்தின் அவல நிலை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை - மீலாத்நகர் கிராமத்தில் கவனிப்பாரற்று இருக்கும் சனசமூக நிலையக் கட்டடத்தினுள் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இக்கட்டடம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் போது 1997 ஜூலை மாதம் 18ஆம் திகதி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவரும் துறைமுக அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி சனசமூக நிலையக் கட்டடம் மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்று உள்ளதுடன் இதன் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரை ஓடுகள் என்பனவும் உடைக்கப்பட்டுள்ளன.

இதை சாதகமாக பயன்படுத்தும் சிலர் மாலை, இரவு வேளைகளில் இக்கட்டடத்தினுள் நுழைந்து மது மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்கின்றனர்.

சிலவேளைகளில் இக்கட்டடத்தினுள் துஷ்பிரயோக நடவடிக்கைகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கட்டடத்துக்குள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றவர்கள் முன்னாலுள்ள பாடசாலையினுள்ளும் நுழைந்து பாடசாலையின் புறச்சூழலையும் தொடர்ச்சியாக சேதம் செய்வதாக பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டுகின்றது. இது குறித்து பாடசாலை சமூகத்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக சென்று முறையிட்டுள்ளனர்.

கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மேற்படி சனசமூக நிலையக்கட்டடத்தைச் சுற்றி அசுத்தமான நீர் நிறைந்து காணப்படுவதால் பாடசாலைச்சூழலில் நுளம்புகள் பகல் வேளையில் அதிகமாக காணப்படுகின்றன. இது குறித்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடமும் பாடசாலை சமூகத்தவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த சனசமூக நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளமையால் மேற்படி கட்டடத்தின் எல்லைகளைச் சுற்றி வேலி அமைத்தும் கட்டடத்தை திருத்தியும் மக்களது பாவனைக்கு வழங்குமாறு பிரதேச தவிசாளரிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X