2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஹஜ் கோட்டாக்கள் பகிர்வது வியாபாரமாக மாறியுள்ளது

Sudharshini   / 2015 ஜூன் 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

ஹஜ் விவகாரத்தை பணம் சம்பாதிப்பதற்கான வியாபாரமாக மாற்றியதன் எதிரொலியே கடந்த சில வருடங்களாக ஹஜ் கோட்டாக்களை பகிர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இப்புனிதப் பயணத்துக்கு வழிகாட்டிகளாக செயற்படுவதே ஹஜ் பிரயாண முகவர்களின் பணியாகும். இதற்காக நியாயமான அளவில் சேவைக் கட்டணம் அறவிடுவதில் தவறில்லை. ஆனால், இதற்கு மாற்றமாக ஹாஜிகளிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்ற இம்முகவர்கள் இன்று அதனை வியாபாரமாக்கி தங்களுக்குள் கடும் போட்டியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதற்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அக்காலப் பகுதியில் ஹஜ் விவகாரம் அரசியலாக்கப்பட்டிருந்தது. ஒரே அரசாங்கத்துக்குள் பௌசி மற்றும் அலவி என இரு அணியும் பின்னர், பௌசி மற்றும் காதர் என இரு அணியும் ஹஜ் விவகாரத்தை பலப் பரீட்சையாக மாற்றியிருந்தது.

தமக்கு வேண்டிய முகவர்களுக்கு கூடுதலான கோட்டாக்கள் வழங்கப்படுவதும் அதற்காக கமிஷன் பெறுவதும் சாதாரணமாக மாறியது. இதனால் ஹாஜிகளே பெரும் நெருக்கடிகளையும் நஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிட்டது.

இத்தகைய ஹஜ் முகவர்கள் அனைவரையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய சூரா சபை என்பன நேரடியாக அழைத்து கருத்தரங்குகளை நடத்தி, அறிவுரைகளை வழங்கி நெறிப்படுத்த முன்வர வேண்டும்.

அத்துடன், எதிர்காலங்களில் ஹஜ் முகவர்களுக்கு கோட்டாக்களை பகிர்ந்தளிப்பதை தவிர்த்து, முஸ்லிம் சமய, கலாசார திணைக்களமே அனைத்து யாத்திரிகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X