Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை உருவாக்கப்படும் என்ற உத்தரவாதம் எவரது அரசியலுக்கும் தீனி போடுவதற்காக அல்லாமல் எத்தகைய சவால்கள் வந்தபோதிலும், அதனை நிறைவேற்றித் தருவதற்கான உறுதிமொழியாக இருக்கவேண்டும் என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்பமிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைத்த கடிதத்திலேயே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '2015.08.09ஆம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஐ.தே.க. வின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தங்களின் உரையின்போது, புதிய அரசாங்கத்தில் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சிசபையை ஏற்படுத்தித்தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தீர்கள்.
மறுமலர்ச்சி மன்றத்தின் நீண்டகாலப் போராட்டம், நாட்டின் பிரதமரான உங்களை கல்முனைக்கு வந்து இந்த உறுதிமொழியை வழங்கவைத்தது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரதேசமான சாய்ந்தமருதுக்கு 1897ஆம் ஆண்டு தொடக்கம் ஓர் உள்ளூராட்சி அதிகாரம் இருந்துவந்தது. பிந்திய காலத்தில் கரைவாகு தெற்கு கிராமசபை எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டுவந்த இந்த உள்ளூராட்சிசபையானது, 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இல்லாதொழிக்கப்பட்டமை துரதிஷ்டமான வரலாறாகும்.
அதாவது, கரைவாகு பட்டின சபையுடன் கரைவாகு தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று கிராம சபைகளும் இணைக்கப்பட்டு, முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதிக்கும் பொதுவாக ஓர் உள்ளூராட்சிமன்றமாக கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அதுவே இன்று கல்முனை மாநகரசபையாக இயங்கிவருகின்றது.
இப்பகுதி மக்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்துகொள்ளாமல், எங்களது உள்ளூராட்சி அதிகாரத்தை இல்லாதொழித்து எமது அடிப்படை உரிமை, அபிலாஷைக்கு சாவுமணி அடிக்கப்பட்டமையை கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
பறிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரத்தை மீளவும் ஏற்படுத்தித்தருமாறு மக்கள் சார்பில் அரசியல் தலைவர்களிடம் மறுமலர்ச்சி மன்றத்தால் கோரப்படுவதுடன், அதற்காக பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்த சம்மேளனத்தினூடாக 2005ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றோம்.
2001 - 2004 காலப்பகுதியில் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலத்திலும் 2015 ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி உதயத்துடன் தாங்கள் பிரதமராக பதவியேற்ற பின்னரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மகஜர்களை தங்களுக்கு அனுப்பியிருந்தோம். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமும் கோரியிருந்தோம்.
எமது அழுத்தங்களின் பயனாக சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் கரு ஜெயசூரியவை சந்தித்து பேசியதன் பயனாக அவர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபையை ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததுடன், வர்த்தமானி அறிவித்தலுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும், பல மாதங்கள் கடந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டிருக்கவில்லை. இதுவே இன்று மக்கள் மத்தியில் பாரிய அங்;கலாய்ப்பையும் அதிருப்தியையும் தேர்தல் களத்தில் குழப்பமான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
51 minute ago
1 hours ago