Janu / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். அப்போது சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இம்ரான் கானுக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார். பிரிட்டனின் கிராஃப் நிறுவனம் தயாரித்த குறித்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.
பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி பிரதமர், அதிபர் வெளிநாட்டு பயணங்களின்போது பெறும் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் (தோஷகானா) ஒப்படைக்க வேண்டும். ஆனால் கைக்கடிகாரத்தை இம்ரான்கான் கருவூலத்தில் ஒப்படைக்காமல் மனைவி புஷ்ரா பீபியிடம் அளித்தார். அவர், அந்த கைக்கடிகாரத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
கைக்கடிகாரத்தை வாங்க விரும்பிய நிறுவனம், அதன் மதிப்பு குறித்து கிராஃப் நிறுவனத்திடம் விசாரித்த போது சவுதி இளவரசருக்காக இரு சிறப்பு கைக்கடிகாரங்களை மட்டுமே தயாரித்த கிராஃப் நிறுவனம், அதில் ஒரு கைக்கடிகாரம் விற்பனைக்கு வருவது குறித்து சவுதி அரேபிய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு தரப்பில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தகவல் கோரப்பட்ட போது விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை இம்ரான் கான் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மனைவியிடம் அளித்திருப்பது தெரியவந்தது.
அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் தொடர்பான வழக்கை இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்த போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கானும் புஷ்ரா பீபியும் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறைக்கு நேரில் சென்ற நீதிபதி ஷாரூக் அங்கேயே தீர்ப்பு வழங்கிஉள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .