2026 மார்ச் 14, சனிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” திறப்பு

Editorial   / 2026 மார்ச் 13 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பிரிவு நேற்று (12) திறந்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமெரிக்கா–இலங்கை Fulbright ஆணையத்தின் பிரதிநிதி கலாநிதி பட்ரிக் மெக்னமாரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய பிரிவைத் திறந்து வைத்தார்.

நூலகமே பல்கலைக்கழகத்தின் இதயம்

நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி பட்ரிக் மெக்னமாரா, "ஒரு பல்கலைக்கழகத்தின் தரம் அதன் நூலகத்தின் மூலம் அளவிடப்படுகிறது; நூலகமே பல்கலைக்கழகத்தின் இதயம்" எனக் குறிப்பிட்டார். மேலும், உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் 'Library of Congress' நிபுணர் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும், அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக முகாமைத்துவத்தைப் பலப்படுத்தப் பயிற்சிகளை வழங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான வாய்ப்புகள்

இந்தப் புதிய பிரிவின் மூலம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்குப் பின்வரும் வசதிகள் கிடைக்கவுள்ளன:

  • Fulbright புலமைப்பரிசில்கள்: சர்வதேச கல்விப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டல்கள்.
  • தேர்வுத் தயாரிப்பு: GRE மற்றும் TOEFL போன்ற சர்வதேசத் தேர்வுகளுக்கான வளங்கள் மற்றும் பயிற்சிப் பொருட்கள்.
  • ஆராய்ச்சித் தொடர்புகள்: உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரவுத்தளங்களை அணுகுவதற்கான வசதிகள்.

உபவேந்தரின் கருத்து

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் உரையாற்றுகையில், இன்றைய காலப்பகுதியில் நூலகங்கள் புத்தகங்களைச் சேமிக்கும் இடமாக மட்டும் அன்றி, உலகளாவிய ஆராய்ச்சித் தொடர்புகளை உருவாக்கும் தளமாக மாற வேண்டும் என்றார். இந்தப் புதிய முயற்சி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு சர்வதேசப் பரிமாணத்தை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் EducationUSA ஆலோசகர் ஈசா ஸ்போரி, கலாநிதி ரொபர்ட் டிபினிஸ், பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X