2026 மார்ச் 19, வியாழக்கிழமை

பராமரிக்கப்படாத காணி உரிமையாளர்களுக்கு அபராதம்

Janu   / 2026 மார்ச் 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நுளம்பு பெருகும் வகையில் காணிகளை பராமரிக்காத உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி. முரளிஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை (16) அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மாவட்டத்தில் குறிப்பாக செங்கலடி, மட்டக்களப்பு நகரம் மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலைக்கு சமூக அக்கறையற்ற முறையில் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகளே பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

"பல காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் வசிக்கின்றனர். சுகாதார அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியும், அவர்கள் காணிகளை துப்பரவு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இவர்களது செயலால் அயலில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே இவ்வாறான சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன," என வைத்தியர் முரளிஸ்வரன் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மத நிறுவனங்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதாக கவலை தெரிவித்த அவர், பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்.

  • இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தத்தமது ஒலிபெருக்கிகள் ஊடாகக் காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் டெங்கு விழிப்புணர்வு அறிவித்தல்களை வழங்க வேண்டும்.
  • அண்மையில் செங்கலடி  பகுதியில் ஒத்துழைப்பு வழங்காத ஒரு பிரபல ஆலயத்தின் மதகுரு மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தற்கொலை  சம்பவங்களை  கட்டுப்படுத்த  சுகாதார  திணைக்களம் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

இருப்பினும், சில பாடசாலை அதிபர்கள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய பாடவேளைகளை ஒதுக்கி  தராமல், மாணவர்களை  தொடர்ந்தும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே, மாணவர்களின் மனநலனை  பேண வாரத்தில் ஒரு பாடவேளையையாவது இதற்கு ஒதுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு  சரியான நிதி வழிகாட்டல்களை வழங்கிச் சமூக  பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .