2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

இந்தியா முழுவதும் உஷார் நிலை

Freelancer   / 2025 நவம்பர் 11 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டில்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம்,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பொலிஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களிலும் பொலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

டில்லியில் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி டில்லி பொலிஸார், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லி மெட்ரோ நிலையங்கள், செங்கோட்டை, முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவை பொலிசாரின் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஹரியானாவில், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. டில்லி எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெரிசலான இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X