2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தமிழர்களுக்கு பெரும் அநியாயம்: சபையில் சாணக்கியன் சீற்றம்

Lenin Raj   / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் மத ரீதியாகப் பாரபட்சம் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று சபையில் கடும் கண்டனங்களை முன்வைத்தார்.

நிலையியற் கட்டளைச்சட்டம் 27/2 இற்கு அமைய உரையாற்றிய அவர், வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் ஒரு வாழை மரத்தைக் கூட நட நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை. ஆனால், ஆலயப் பகுதியில் பெரும்பான்மையினருக்குச் சொந்தமான 58 வர்த்தக நிலையங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.

தாந்தாமலை: மட்டக்களப்பு, தாந்தாமலை ஆலயத்தில் தீக்கிரையான மின்சார மீற்றர் பெட்டியை (Meter Box) மீண்டும் பொருத்துவதற்குக்கூட தொல்பொருள் திணைக்களம் முட்டுக்கட்டை போடுகிறது. ஆலயக் கட்டடத்தைச் சேதப்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள அரச மரத்தை வெட்டக்கூட அனுமதி மறுக்கப்படும் நிலையில், அதே பகுதியில் புதிய விகாரை அமைக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை குச்சவெளி பகுதியில் 24 கிராம சேவகர் பிரிவுகளில் 500-க்கும் குறைவான சிங்கள மக்களே வசிக்கின்றனர். ஆனால், அங்கு புதிதாக 38 விகாரைகளை அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதாவது, தலா 10 சிங்களவர்களுக்கு ஒரு விகாரை என்ற வீதத்தில் இவை திட்டமிடப்படுகின்றன.

குருந்தூர் மலை ஆலயத்திற்குச் சொந்தமான 78 ஏக்கர் காணியில் விவசாயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குளத்தில் தமிழர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கும் இராணுவம், சிங்களவர்கள் மீன் பிடிக்க மட்டும் ஒத்துழைப்பு வழங்குகிறது. அங்கே தேங்காய் உடைத்து வழிபாடு செய்யக்கூட முடியாத நிலை காணப்படுகிறது.

வெடுக்குநாறி மலை: தொன்மையான வழிபாட்டு இடமான வெடுக்குநாறி மலையில் வழிபட அனுமதி மறுக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அரசு சட்டபூர்வமாக்க முயல்கிறது.

நேற்றைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியது போல, பலாலி - மயிலிட்டி பகுதியில் அமைந்துள்ள 'காணிக்கை மாதா' தேவாலயம் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாட மறுத்து, தன்னிச்சையாகச் செயற்படுகின்றனர்.

அனைத்து அரச ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுகின்றன. தமிழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ் தெரியாத சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

"ஒரே நாடு, இரு சட்டங்கள் என்பது போலத் தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதியும், பௌத்தர்களுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?" என சாணக்கியன் தனது உரையில் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .