S.Renuka / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தற்போது தமிழகத்தின் மிகவும் பணக்கார பெண் வேட்பாளராக உருவெடுத்துள்ளார். மார்ட்டின் குழுமத்தின் இயக்குநராக இருக்கும் 58 வயதான இவர், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியல் மட்டும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது.

இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் அடிப்படையில், கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமூகப் பணி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லீமா ரோஸின் பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு மட்டும் ரூ.139.63 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.909.94 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவரது பெயரில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இது தவிர, இவரது கணவர் பெயரில் ரூ.3,262 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.887.36 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவன் – மனைவி இருவரின் மொத்த சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுவது தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வைர நகைகளிலும் லீமா ரோஸ் பிரம்மாண்டமான முதலீடுகளை வைத்துள்ளார். இவரது பெயரில் மட்டும் 19 கிலோ தங்கம், 1,217 கேரட் வைரம், 13 கிலோ வெள்ளி மற்றும் 33 கிராம் பிளாட்டினம் உள்ளது. இவரது கணவர் பெயரில் 281 கிராம் தங்கம், 9.83 கேரட் வைரம், 21 கிலோ வெள்ளி மற்றும் 321 கிராம் மதிப்பிலான முத்துக்கள் உள்ளன. கையில் ரொக்கமாக லீமா ரோஸ் ரூ.5.52 லட்சமும், அவரது கணவர் ரூ.56.48 லட்சமும் வைத்துள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான சொத்து விவரங்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டு அவர் தாக்கல் செய்துள்ளார்.
லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகக் களம் காணும் லீமா ரோஸ், தனது பிரம்மாண்ட சொத்துக்கள் மற்றும் கல்வித் தகுதியுடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கெனவே அத்தொகுதியில் மார்ட்டின் குழுமம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருவதால், அது தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்தச் சொத்து மதிப்பைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், இந்த ‘பணக்கார வேட்பாளர்’ அந்தஸ்து அவருக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago