2025 ஜூன் 13, வெள்ளிக்கிழமை

தவறான தரவுகள்;CID சென்றார் நீதியமைச்சர்

Simrith   / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது கல்வித் தகுதி தொடர்பான பிழையான தரவுகள் பாராளுமன்ற தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். 

நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் கல்வித் தகைமைகள் தொடர்பான விவரங்கள் பாராளுமன்ற இணையத்தளத்தில் தவறாக பதிவேற்றப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி, அவை தவறானவை என கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது. 

பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால், உரிய தரவுகளை உள்ளீடு செய்வதில் ஏற்பட்ட பிழை காரணமாக, கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார். 

அரசாங்க எம்.பி.க்களின் கல்வித் தகுதி தொடர்பான அண்மைக்கால சர்ச்சைகளை கருத்தில் கொண்டு, இது தனிப்பட்ட சம்பவமாகத் தெரியவில்லை எனக் கூறிய அமைச்சர் நாணயக்கார, இவ்வாறான பிழையான தரவுகள் எவ்வாறு உள்ளிடப்பட்டன என்பதைக் கண்டறிவது அவசியமானது என இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக வெளியான பல்வேறு ஊடகச் செய்திகளால் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதம் குறித்து சிவில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றம் தொடர்பான சரியான கேள்விகளை பொதுமக்கள் கேட்க ஆரம்பித்துள்ளமை குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியடைவதாக நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

"முன்னதாக, ஒரு எம்.பி எதனோல் (ethanol) அல்லது போதைப்பொருள் விற்கிறாரா, அல்லது தண்டனை பெற்ற ஒருவர் எப்படி எம்.பி.யாக நியமிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினர். அல்லது பார் பர்மிட் பற்றிய விவாதங்கள் நடந்தன. தற்போது எம்.பி.க்களின் கல்வித் தகுதி குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது NPP கொண்டு வந்த மாற்றம். இந்த மாற்றம் மட்டுமே அரசுக்குக் கிடைத்த வெற்றி,” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .