2026 மார்ச் 21, சனிக்கிழமை

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக அரிசி விலை மற்றும் தற்போதைய அரிசி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 6,000 மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக  அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் விதிகளுக்கு ஏற்ப இந்த அரிசியை இறக்குமதி செய்வதை துரிதப்படுத்துமாறு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதாக  குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்  இதனைத் தெரிவித்தார்.

அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, குருநாகல், அனுராதபுரம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனியார் கூட்டுறவின் கீழ்  ஐந்து அதி நவீன அரிசி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அவற்றின் மூலம், எதிர்வரும் பெரும்போகத்தில் உற்பத்தி செய்யப்படும்  அரிசியை லங்கா சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சந்தைப்படுத்த வேண்டும் என்று பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .