Freelancer / 2022 ஜனவரி 26 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்துவதற்கே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .
கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் அண்மையில் நாம் பேச்சு நடத்தியிருந்தோம். இதன்போது பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் பிரதானமாக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அந்தவகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்திருந்த நிலையில் அதற்கு நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எமது மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முறையாக இயங்கவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளும் உரிய வகையில் இல்லை.
இந்நிலையில் 450 சுகாதார நிறுவனங்களில் முதற்கட்டமாக 59 ஐ அரசு பொறுப்பேற்று, நிர்வகிக்கவுள்ளது. இதன்மூலம் எமது மக்களுக்கு உரிய சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். எஞ்சிய சுகாதார நிறுவனங்களையும் அரசு விரைவில் பொறுப்பேற்கும் என்றார்.
இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவிக்கு புதியவர் இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, "விரைவில் தேசிய சபைக் கூட்டப்படும். அக்கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்" என்று பதிலளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .