2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

யாழ். குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் களத்தில் குதிப்பார்

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் தற்போது தலைவிரித்து ஆடும் கொலை மற்றும் கொள்ளை நடவடிக்கைகளை நேரடியாகத் தடுத்து நிறுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் முகமாக பொலிஸ் மா அதிபர் பூசித ஜயசுந்தர யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

கொழும்பில் வாழும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த சமூக முன்னோடிகள், என்னைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில், நான் தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவுவதாகக் கூறப்படும் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலைமையையும், அவை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறலாம் என்ற அவர்களின் சந்தேகத்தையும் எனது கணக்கில் எடுத்துள்ளேன்.

இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் அமைச்சரவை சந்திப்பின் போது கலந்துரையாடியுள்ளேன். அதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருடனும் உரையாடியுள்ளேன்.

இந்நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் உறுப்புரிமையை கொண்ட நாடுகளின், பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டுக்குச் சென்றுள்ள பொலிஸ் மாதிபர், இவ்வார இறுதியில் நாடு திரும்பியதும், அவர், யாழ்ப்பாணம் சென்று மூன்று தினங்கள் அங்கு தங்கி இருந்து அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை கண்காணிப்பு நடவடிக்கைகளை நேரடியாக வழி நடத்துவார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீரவும், பொலிஸ் மாதிபருடன் வடக்குக்குச் செல்லவேண்டும் என்ற என் யோசனையும் நடைமுறையாகும்.

வடக்கே சென்று அங்கு மக்கள் பிரதிநிதிகளையும், சமூக தலைவர்களையும், வடக்குக்குப் பொறுப்பான முழு பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருசேர சந்தித்து தற்போது அங்கு தலைவிரித்தாடும் கொலை மற்றும் கொள்ளைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அமைச்சர் சாகல ரத்நாயக உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .