2025 ஜூன் 23, திங்கட்கிழமை

லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் தரையிறக்கம்

Editorial   / 2025 ஜூன் 22 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (22) காலை லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஈரான் வான்வழி மூடப்பட்டதால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வழக்கமாக காலை 5.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இன்று (ஜூன் 22) காலையில் விமானம் தாமதமாக 6.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டது.

இந்த விமானத்தில் 247 பயணிகள், 15 விமான ஊழியர்கள் என்று மொத்தம் 262 பேர் பயணம் செய்தனர். விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வான் வழியாக சென்று கடல் வான் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதால் மத்திய கிழக்கு நாடுகள் அருகே உள்ள வான் வழி எல்லைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தின் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

இதனால் பாதுகாப்பு நலன் கருதி விமானத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் என்று விமானிக்கு அறிவுறுத்தப்பட்டு மீண்டும் சென்னையில் தரையிறக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இன்று (22) காலை மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதன் பின்னர் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழே இறக்கி விமான நிலையத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு தண்ணீர் வழங்கப்பட்டது.

இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் 247 விமான பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி எல்லைகள் திறக்கப்பட்டதாக சென்னை உள்ளிட்ட அனைத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று (ஜூன் 22) காலை 11.15 மணிக்கு மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் லண்டன் புறப்பட தயாரானது. எனவே மீண்டும் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு 11.30 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .