2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

“விஜய் கைது செய்யப்படுவாரா?”: கரூரில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Editorial   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை. நேற்று இரவு 7.30 மணிக்கு கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு செல்வதாக தகவல் வந்தது. உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியரை அழைத்து மருத்துவமனைக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தினேன்.

 

அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அமைச்சர்களை கரூருக்கு அனுப்பி வைத்தேன். தலைமைச் செயலகத்தில் உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி கரூரில் உள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.

அருகாமை மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளையும் உதவிக்கு அனுப்பி வைத்தேன். இந்த சம்பவத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம். அந்த கொடூரமான காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை. வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் இரவு 1 மணி அளவில் புறப்பட்டு கரூர் வந்தேன்.

ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன். அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.நீங்கள் யார் கைது செய்யப்படுவார்கள்? என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் என்னை உட்படுத்த தயாராக இல்லை" என்றார். 'கேட்ட இடத்தை தரவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே..?' என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X