2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வடமாகாண தாதியர்கள் நாளை வேலைநிறுத்தம்

Editorial   / 2025 நவம்பர் 11 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்பட்டல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பம் பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

வேலைநிறுத்தம் புதன்கிழமை12) காலை 7 மணிக்கு ஆரம்பித்து, வியாழக்கிழமை (13) காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது.

இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாண சபைகளில் அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளில்/சுகாதார நிறுவனங்களில் இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும்.

தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுகின்றனர். சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்களில் கடமைகள், அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கடமைகள் போன்ற ஒன்றுக்கொன்று வேறுபட்ட கொடுப்பனவுகளுக்கான அடிப்படையாக அமையும் கடமைகளை அவர்கள் செய்கின்றனர்.

தற்போது உள்ள சேவை தேவைகள் காரணமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு தாதியரும் இந்தக் கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது.இத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கொடுப்பனவுகளுக்கான தெளிவான உறுதிப்படுத்தலுக்காக, சாதாரண கடமைகளுக்கு மேலதிகமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கான அடிப்படையாக அமையும் ஏனைய ஒவ்வொரு கடமை நேரங்களுக்கும் தனித்தனி வருகைப்பதிவேடுகளை பேணுவதற்கு சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து ஊழியர்களும் ஒரே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதால், பல்வேறு கடமை நிலைகளை இலகுவாக அடையாளம் காண்பது ஒரு பாரிய பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், சேவைத் தேவையின் பேரில் செய்யப்படும் மேலதிக கடமைகளுக்கான உரிய கொடுப்பனவுகளை கூட இழக்கும் அபாயம் உருவாகலாம் என்பது தெளிவாகிறது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக, எதிர்காலத்தில் உயிரியல் அளவீட்டு முறைகள் அமுல்படுத்தப்படும் போது, அதற்கேற்ப தற்போதுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொள்ளலாம் என்று தெரிவிப்பதோடு, இதுவரை இடைக்கால நடவடிக்கையாக, வெறுமனே கணக்காய்வு அதிகாரிகளுக்கு வசதியாக அமையும், ஆனால் ஏனைய அதிகாரிகளுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த யோசனையை அமுல்படுத்துவதை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்  என்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X