2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘தமிழ் மக்களை நல்லாட்சி கைவிடாது’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

“தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கி வருகின்றது. இதன்போது, அரசியல் ரீதியாக பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இந்த அரசாங்கம், தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடாது” என, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். 

யுத்த காலத்தில், வங்கி ஆவணங்களைத் தொலைத்த தமது வாடிக்கையாளர்கள் 54 பேருக்கு, அவற்றை மீளப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வொன்று, தேசிய சேமிப்பு வங்கியின் தலைமையில், கிளிநொச்சி பாரதி விருந்தினர் விடுதியில், நேற்றுத் திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 

“தமிழ் மக்கள், பெரும்பான்மையின மக்களின் அட்டூழியங்களுக்கு உட்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அடிமைப்பட்டு வாழும் நிலைமையொன்று, தமிழ் மக்களுக்கு ஏற்படுவதோடு, அவர்களிடம் அடிவாங்கும் சந்தர்ப்பமும் உருவாகுமென, யோகர் சுவாமிகள், ஏற்கெனவே கூறியிருந்தார். அவர் சொன்னது போல, தமிழ் மக்கள் கொடூரமான போரைச் சந்தித்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்கள். 

ஆனாலும், தமிழ் மக்கள் தங்களுடைய மரபு, மொழி, பண்பாடு, கலாசாரம், கருத்துக்கள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்தே வருகின்றனர். வடக்கு மாகாணம், வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இன்னும் நான்கு, ஐந்து வருடங்களில், இந்த மாவட்டங்கள் முன்னேற்றம் அடையும். அதற்கான நடவடிக்கைகளை, இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் சேர்ந்து, தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முன்வந்து செய்து வருகின்றனர். அதனை தமிழ் மக்கள் மறுக்க முடியாது. இன்று ஜனாதிபதி ஜனாதிபதியாக இருப்பதற்கு காரணம், தமிழ் மக்களின் வாக்குகளே. ஆதலினால், அவர் ஒருபோதும், தமிழ் மக்களை கைவிடமாட்டார். 

எங்களுடைய அரசாங்கம் ஒரு போதும் தமிழ் மக்களை கைவிடமாட்டாது என்பதை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். முற்போக்காக எங்களுடைய வேலைகளை செய்யும் போது, பல தடைகள் வருகின்றன. அவை, அரசியல் ரீதியான தடைகளாகவும் இருக்கின்றன. 

முப்பது வருடங்களாக யுத்தத்தால் அழிவடைந்த தமிழ் மக்களின் வாழக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் பெரும்பாடுபடுகின்றது. அதற்காக, தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசு பிழை செய்தால், அதனை மக்கள் தாராளமாகக் கூறலாம். ஆனால், அபிவிருத்திப் பணிகளை செய்ய முன்னரும் செய்கின்ற போதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

தமிழர்கள் வாழ வேண்டும் என்றால், சமூதாயம் முன்னேற வேண்டும். அதற்காக, நாங்கள் எங்கள் கடமையைச் செய்கின்றோம் என்பதுதான் எமது கருத்து. இதற்கு, அரசியல் வேறுபாடு இருக்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும், சமூதாய முன்னேற்றத்துக்காக உழைக்கின்றவர்களை நாம் ஆதரிப்போம்” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .