2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிப்படைய இடமளியோம்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றீடாக சர்வதேசத் தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கு, அரசாங்கம் மும்முரம் காட்டி வருகின்றது. இச்சட்டமூல வரைவைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது, முஸ்லிம்களுக்குப் பாதிப்பாக அமையவுள்ளதாக சில தரப்பினர் எதிர்வு கூறியுள்ளனர். அவ்வாறு அது, முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையுமாயின், நாங்கள் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம்” எனப் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சிறுபான்மைச் சமூகத்துக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. இதனால், வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற அப்பாவித் தமிழ் மக்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சர்வதேசத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.  

சர்வதேசத்தின் ஆலோசனைக்கு அமைவாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் புதிய சட்டமூல வரைவின் பணிகள் தற்போது, நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருகின்றதாக, அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டது.  

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில அம்சங்கள், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பானதாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு அது பெரிதும் பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அண்மையில், நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்தது. எம்மிடம் இதுவரை இந்த சட்டமூல வரைவின் மாதிரி வழங்கப்படவில்லை. எனினும், எந்தச் சட்டமூலமாக இருந்தாலும், அது முஸ்லிம்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ பாதிப்பாக அமையுமாயின், அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.  

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவானது, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அங்கு இது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று, தேவை ஏற்படின் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரே, இதனைச் சட்டமூலமாக நிறைவேற்றப்படும். சிறுபான்மைச் சமூகத்துக்குப் பாதிப்பாக இந்தச் சட்டமூல அமைந்திருப்பின் அல்லது அமையுமாயின், நாடாளுமன்றத்தில் நாங்கள், எமது எதிர்ப்பினை வெளியிடுவோம்.  

சர்வதேச ரீதியில் தலைதூக்கியுள்ள இணையக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பொருளாதார சவால்களை முறியடிக்கும் வகையிலுமே, இந்தச் சட்டமூலம் அமையவுள்ளதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது. எனவே, இவ்வாறான அம்சங்களை நாங்கள் வரவேற்றாலும், அதில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின், கடும் எதிர்ப்பினை நிச்சயம் வெளியிடுவோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .