2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது அக்கறையில்லை’

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது எந்த அக்கறையுமில்லை” என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

 

மூதூர்த் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று, அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்ற போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனினும், முக்கிய அலுவலகங்களில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லாமை, இம்மாவட்ட முஸ்லிம்களிடையே பெருங்கவலையைத் தோற்றுவித்துள்ளது.

“திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முக்கிய பதவிகளிலும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லை. எனவே, குறைந்தது ஏதாவதொரு பதவிக்காவது முஸ்லிம் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்து வருகின்றது.

“இதற்காக பதவியில் இருக்கின்ற எவரையும் இடமாற்றாது, வெற்றிடமாகவுள்ள சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் பதவிக்காவது முஸ்லிம் உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து தருமாறு நான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தேன்.

“இந்த விடயத்தை உடன் தான் செய்து தருவதாக அவர் எனக்கு வாக்குறுதி அளித்தார். எனினும், சுமார் 9 மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை எதுவும் நடக்க வில்லை.

“ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களால் எமது மாவட்ட முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“முஸ்லிம் மக்களின் நடைமுறைச் சாத்தியமான இந்தச் சின்னக் கோரிக்கையையே நிறைவேற்றித்தராத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் இருந்து வேறு எவற்றை இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்பார்க்க முடியும்.

“இதற்காக நமது அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பமாக தேர்தலொன்று நம்மை எதிர்நோக்கி வருகின்றது. எல்லா முஸ்லிம் மக்களும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X