2025 மே 21, புதன்கிழமை

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்காக  தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (16) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இப்  பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை முடித்து தொழில் வாய்ப்பற்ற நிலையிலுள்ள இளைஞர் யுவதிகளையும் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் நிலையிலுள்ள மாணவர்களும் பயன் பெறும் வகையில்,  அவர்களுக்குத் தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ்களையும் பயிற்சி பெறுகின்ற துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தரும் நோக்கில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.

இங்கு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உரையாற்றுகையில்,

“வருடந்தோறும் சுமார் ஆறு இலட்சம் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, அதில் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் உயர்தரம் செல்கின்றனர். பின் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அவர்களில் வெறும் 25,000 பேரே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர்.

இங்கே வருடாவருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறத் தவறும் இரண்டு இலட்சம் பேர் அத்தோடு உயர்தரம் முடித்து பாடசாலைகளிலிருந்து வெளியேறும் மூன்றரை இலட்சம் பேர் என இவர்கள் அனைவரும் இலங்கையில் வேலைவாய்ப்பற்றவர்களாகவே இருக்கின்றனர்.

அவ்வாறானவர்களை இலக்காகக்கொண்டு அவர்களுக்குத் தொழிற் பயிற்சிநெறிகளை வழங்கி, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், முன்னெடுக்கப்படும் இவ்வாறான வேலைத்திட்டங்களை எமது பிரதேச தமிழ் இளைஞர் யுவதிகள் தவறவிட்டுவிடக்கூடாது எனக்  குறிப்பிட்டார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தொடர்பாகவும் அவ்வெற்றிடங்களுக்காக தேவைப்படும் ஆளணியினரான இளைஞர், யுவதிகளுக்கு சுவாட் அமைப்பினூடாக வழங்கப்படவுள்ள தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாகவும் கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் சார்பில் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம் விளக்கமளித்தார்.

இக்கருந்தரங்கில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், மனித வள அபிவிருத்தி உதவியாளர் எல்.சந்திரபவன் மற்றும் திறன் அபிவிருத்தி உதவியாளர் வி.நடனகுமார் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கருத்தரங்கில் சுவாட் அமைப்பின் திட்ட முகாமையார் எஸ்.பிறேமலதன், கள இணைப்பாளர் ரி.ரமேஷ், கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள்  நிறுவனத்தின் சார்பில் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம் மற்றும் அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சிநெறிகளுக்கான இணைப்பு உத்தியோகத்தர் திருமதி. குகாசினி ரதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .