2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்டனர் நடப்புச் சம்பியன்கள்

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது. இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸாலேயே ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.

அஜக்ஸின் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றிருந்த நிலையில், றியல் மட்ரிட்டின் மைதானத்தில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், சக முன்கள வீரரான டுஸன் டடிக்கிடமிருந்து பெற்ற பந்தை, போட்டியின் ஏழாவது நிமிடத்தில் அஜக்ஸின் மத்தியகள வீரரான ஹக்கீம் ஸியெச் கோலாக்க, அவ்வணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

பின்னர், 18ஆவது நிமிடத்தில் டுஸன் டடிக் கொடுத்த பந்தை அவரின் சக முன்கள வீரரான டேவிட் நெரெஸ் கோலாக்க, தமது முன்னிலையை அஜக்ஸ் இரட்டிப்பாக்கியது. தொடர்ந்த போட்டியின் 62ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற டுஸன் டடிக், அஜக்ஸின் முன்னிலையை 3-0 என்ற கோல் கணக்கில் உயர்த்தினார்.

பின்னர், 70ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற றியல் மட்ரிட்டின் மார்கோ அஸென்ஸியோ, முன்னிலையை ஒரு கோலால் குறைத்தார். எனினும், அடுத்த இரண்டாவது நிமிடத்தில், அஜக்ஸின் லஸே ஸ்கோனே ஒரு கோலைப் பெற்றதுடன், இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற அவ்வணி, 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற தமது இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, 4-0 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .