2025 மே 14, புதன்கிழமை

‘அரசியலைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக கூட்டமைப்பு திகழ்கின்றது’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

இந்த நாட்டினுடைய அரசியலைத் தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாகவே தமிழ் மக்களும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திகழ்வதாக, கூட்டமைப்பின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்

எந்தக் கட்சியினர் ஆட்சி புரிந்தாலும் அவர்களது ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் பெரிய பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரமதாசவின் பிறந்த தினத்தையொட்டி, “நாடுபூராகவும் 100 வீட்டுத்திட்டம்” எனும் கருப்பொருளில், வீடமைப்பு அதிகார சபையால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள், நேற்று (12) நடைபெற்றன.

இதற்கமைய, மட்டக்களப்பு, நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தின் மத்தியமுகாம்  6இல் 25 வீட்டுத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்நிகழ்வில்,  நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கோடீஸ்வரன் எம்.பி கூறியதாவது, இந்த நாட்டில் நல்லதோர் ஆட்சி நிலைத்திருக்கின்றது என்றால், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே முன்னெடுக்கப்படதாகவே இருக்கின்றதென்றார்.

நாட்டினுடைய ஜனநாயகத்தைப் பாதுகாத்து, சட்டம், ஒழுங்கு நீதியை நிலைநாட்டிய பெருமை கூட்டமைப்புக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் நலன் சார்ந்ததாக  தந்தை -செல்வா, பண்டா - செல்வா உள்ளிட்ட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும் பேரினவாத சக்திகளால் அன்று அவை கிழித்தெறியப்பட்டதாகவும் அந்நிலைமை இன்று தொடர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல விட்டுக் கொடுப்புகளை த.தே.கூ செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், தற்போது 80 தடவை ஆராயப்பட்ட  அரசியல் சாசனத்தை பேரினவாதிகள் நிராகரிக்கும் சதிகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நீதிக்கானதும் நியாயமான கோரிக்கைகளுக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், அபிவிருத்தி, தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் எனும் சமமான இலக்கை நோக்கியே இப்பொழுது பயணிப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .