2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் விகாரைக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு

Editorial   / 2017 ஜூலை 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மத ஸ்தலங்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக யுத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரைக்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டு தொகைக்கான காசோலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஏறாவூர் புலிதலாராமய விகாராதிபதி அமன்வல தர்மரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து மேற்படி நிதி கையளிக்கப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யுத்த காலப் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரை மிகவும் மோசமான நிலையில் இயங்கி வந்தது. இந்நிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு ஏறாவூர் புலிதலாராமய விகாராதிபதி அமன்வல தர்மரத்ன தேரர் கொண்டு சென்றிருந்தார்.

இதனை அடுத்து விகாரைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த இராஜாங்க அமைச்சர், யுத்தம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு தனது அமைச்சால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் முன்வந்தார். 

அதற்கமைய குறித்த விகாரைக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நிதி மூன்று கட்டங்களாக வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபாய் தற்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X