2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கு, தலா 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இவ்வாரம் வழங்குவதற்கு, அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பனவு,  வலது குறைந்தோருக்கான  கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கு, தலா 5ஆயிரம் ரூபா கொடுப்பணவு இவ்வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், இன்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்  தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருப்பதால் தொழிலை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுமார் 17ஆயிரம் குடும்பங்களுக்கும் இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு, அடுத்த வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சதோச நிறுவனத்தினூடாக மானிய விலையில் பருப்பு, டின்மீன், சீனி, பெரியவெங்காயம், கடலைபோன்ற அத்தியவசியப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இப்பொருட்கள் வறிய மக்களைச் சென்றடையும் வகையில் அரச உதவி 5ஆயிரம் ரூபாயை வழங்கும் இடங்களில் இரண்டு வாரங்களுக்குத் தேவையான சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அரசினால் வழங்கப்படும் உதவிகளை விட அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிநபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியர் சங்கம் உட்பட வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மாவட்டச் செயலகத்தினூடாக ஊடாக, பிரதேச செயலகங்கள் மூலம் சுமார் 41ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்றார்.

ஒவ்வொன்றும் ஆயிரத்தி முன்னூறு ரூபாய் பெறுமதியான பொதிகள் எனவும் இவை பிரதேச செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வருகின்ற மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X