2025 மே 19, திங்கட்கிழமை

’கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி’

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாண ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஊடாக, அதிகளவான சிங்கள மொழிமூல பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர் எனவும், உள்வாங்கியவர்கள்கூட சித்தியடைந்தவர்கள் அல்லாமல், சுற்றுநிரூபத்துக்குப் புறம்பாக உள்வாங்கப்படவுள்ளனர் எனவும், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தமது தொழில் உரிமை மீறப்படடுள்ளதாகவும், மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் உட்பட அதன் உறுப்பினர்கள் சென்று, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

அதனைத்தொடர்ந்து தமது நிலைமைகள் தொடர்பிலும், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைப் போராட்டம், கடந்த ஒரு வருட காலமாக இடம்பெற்றதன் பிரகாரம், கிழக்கு மாகாண சபையால் கடந்த காலங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டிருந்தது.

“ஆனால், தொடர்ந்தும் பட்டதாரிகளின் போராட்டத்துக்குச் செவிசாய்க்காத மத்திய, மாகாண அரசாங்கங்கள், எமக்கான அநீதியையே இழைத்துக் கொண்டிருக்கின்றன.

“தற்போது கிழக்கு மாகாண சபையால் வழங்கப்படவுள்ள 387 நியமனங்களும், கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கு ஓர் அநீதியான முறையிலே வழங்கப்படுகின்றமையை உணரக் கூடியதாகவுள்ளது.

“தற்போது எம்மால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளித்ததன் பிரகாரம் கிழக்கிலுள்ள 2,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு, நிதி அனுமதியை வழங்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர், எதிர்வரும் மாதம் 387 பட்டதாரிகளை நியமிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.

“இந்த நியமனமும் அநீதியான முறையிலேயே இடம்பெற இருக்கிறது. இந்நியமனத்தின்மூலம் தமிழ்மொழிமூல பட்டதாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 10 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 44 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், சிங்களமொழிமூல பட்டதாரிகள் அம்பாறை மாவட்டத்தில் 122 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 127 பேரும் நியமிக்கப்பட உள்ளமை, எமது தமிழ்மொழிமூல பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.

“இந்த அநீதியை எதிர்த்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம். அத்தோடு, பிரபல சட்டத்தரணி ஊடாக, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

“இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறான நிலை தொடருமாயின், எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலிலே, பட்டதாரிகளாகிய நாங்கள், எமக்கான அநீதியை எதிர்க்கும் பொருட்டு, தேர்தலில் களமிறங்கி, எமக்கான பலத்தை நாங்கள் இந்த மாகாண சபைக்கு எதிராக நிரூபிப்போம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X