2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதே இன முரண்பாடுகளுக்கு பிரதான தோற்றுவாயாகும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடகாலத்தை மீள்நோக்கிப் பார்க்கும்பொழுது, இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு பிரதான தோற்றுவாயாக இருந்தது மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்;ட விடயமே என சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்தார்.

நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்புத் தொடர்பான வதிவிடச் செயலமர்வு மட்டக்களப்பு, பாசிக்குடாப் பிரசேத்திலுள்ள அமாயா சுற்றுலா விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மனச்சாட்சிகள் மையங்கள் தொடர்பான சர்வதேச கூட்டமைப்புடன் இணைந்து சமூக அபிவிருத்தி நிறுவனம் நடத்திய இந்தச் செயலமர்வில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 30 சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மலையக மக்களின் பிரஜா உரிமை 1948ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்துடன் மறுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் காங்கிரஸின்; செயற்பாடுகளின் விளைவாக மலையகத்தவர்கள் அநியாயமாகப் பாதிக்கப்பட்டதை முன்னிறுத்தி ஆக்ரோஷமடைந்த தந்தை செல்வா, அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார்.
மலையக மக்கள் பிரஜா உரிமை அற்ற நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதன் பின்னணியே தமிழ் பேசும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெறுவதற்கான சிந்தனைத் தளத்தை உருவாக்கியது' என்றார்.  

'தமிழரசுக் கட்சியை உருவாக்கும்போது முன்வைக்கப்பட்ட 04 கோரிக்கைகளில்; மலையக மக்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையும் இடம்பெற்றிருந்தது.

1948ஆம் ஆண்டு ஆரம்பித்த மலையக மக்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையானது தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக பகுதி பகுதியாக பிரஜா உரிமை வழங்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு முழுமையாகத் தீர்க்கப்பட்டு முடிவுக்கு வந்தது.

இந்த வேளையில் இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் பேசும் இலங்கைச் சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுத்துவந்திருக்கின்றது என்;ற வரலாற்று உண்மையையும் மறக்க முடியாது.

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், மலையக மக்கள் ஆகியோருக்காக இலங்கைத் திராவிட இயக்கம் குரல் கொடுத்து வந்திருக்கின்றது என்பதை நாம் வரலாறு நெடுகிலும் காணக் கூடியதாகவுள்ளது.

அந்த இயக்கத்தைப் பற்றி நான் ஆய்வு செய்தபோது, இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களுக்கு வரலாற்றுப் பதிவு அவசியம் தேவை என்பதை நான் உணர்ந்துகொண்டு, அதன் பின்னர் எனது அயராத முயற்சியால் கண்டியில் அருங்காட்சியகத்தை நான் உருவாக்கியுள்ளேன்.

எனவே, மாறிவருகின்ற சூழலில் எப்பொழுதுமே வரலாற்றுப் பதிவுகள் எம்மிடம் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை எமக்கு வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன' என்றார்.  

'தற்போதைய யுத்தம் முடிவடைந்துள்ள சூழலில் அடுத்த முன்நகர்வுகள் பற்றி மக்களிடம் எந்தவித தெளிவுகளும் இல்லாமல் இருக்கின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X