2025 மே 14, புதன்கிழமை

'விவரங்களை திரட்டும் பணியினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்'

Gavitha   / 2016 மார்ச் 12 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள வீடுகளில் தங்கியிருப்பவர்கள் பற்றி விவரங்கள் திரட்டும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியு;ளளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற கலாசார, பண்பாடு விழுமியங்கள் தொடர்பான அதிகார சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வானது, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் வாகரைப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

'மட்டக்களப்பு நகர் பகுதியில் பொலிஸார் ஒலிபெருக்கி சாதனங்கள் மூலம் பொலிஸ் கட்டளைச் சட்டம் 76ஆம் பிரிவின் படி விவரங்களை பதிவு செய்வதற்கான படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 குறித்த படிவத்தை வீடு வீடாகச் சென்று விநியோகித்து,  தங்கியிருப்போர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் போன்றோரின் விவரங்களைத் திரட்டி வருகின்றனர். ஏன்? எதற்காக தங்கியிருக்கின்றீர்கள் போன்ற கேள்விகளை, பொலிஸார் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு பதிவு  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடியிருப்பாளர்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்' என்று அவர் கூறினார்.

'தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் யுத்தமில்லை. புலிகளை ஒழித்து விட்டோம் என்று கூறுகின்ற போது ஏன் இவ்வாறான நடவடிக்கை நடைபெறுகிறது என்பது ஒரு கவலையான விடயம் ஆகும். இவ்வாறு தகவல் திரட்டுவதாயின் இலங்கை பூராகவும் தகவல் திரட்ட வேண்டும். இதுதான் நல்லாட்சியா? என்ற கேள்வி உருவாகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்கள், மாறி மாறி வருகின்ற அரசாங்கத்தினால் மிதிக்கப்படுகின்றார்கள் என்ற நிலைமை இல்லாது, தமிழ் மக்களையும் இந்த நாட்டின் மக்களாக ஏற்குமாறு நான் கேருகின்றேன்' என்று அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X