
-வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன், தேவ அச்சுதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாகக் கடமையாற்றி வந்த 1179 பட்டதாரிகளுக்கு நேற்றைய தினம் காலை மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் நிகழ்வு நேற்று (07) சனிக்கிழமை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள டேபா மண்டபத்தல் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பட்டதாரிப் பயிலுனர்களாக கடந்த வருடம் 6ஆம் மாதத்தில் இணைக்கப்பட்ட 2000இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் முதல் தொகுதியினருக்கே இந்த நிரந்ததர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.