2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எம்பிலிபிட்டிய நகர சபைக்கு ஆளுநர் எச்சரிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம். பாயிஸ்

 

எம்பிலிபிட்டிய நகர சபையில் இடம்பெறும் நிர்வாக நெருக்கடிகள், தொடர்ந்து நீடித்தால், அதன் நிர்வாகத்தைச் சுவீகரித்து, செயலாளர் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டிய நிலை ஏற்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம தஸநாயக்க, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எம்பிலிபிட்டி நகர சபையை ஆளும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு இடையே நிலவும்  முரண்பாடுகள் காரணமாக, 3 மாதங்களாக நகர சபை நிர்வாகத்தில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இதன்காரணமாக, எம்பிலிபிட்டிய நகர சபையின் இம்மாதக் கூட்டத் தொடர் நடைபெற்றிருக்கவில்லை. நகர சபையின் தலைவர் தலைமையிலான குழுவினர், நகர சபையில் தன்னிச்சையாகச் செயற்படுவதன் காரணமாக, நகர சபையின் உறுப்பினர்கள் மத்தியில் பிரிவினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், நிர்வாக சபை செயலிழந்து வருவதாகப் பல்வேறு தரப்புகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.  

இந்நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்காக, சப்ரகமுவ மாகாண ஆளுநர், நகர சபையின் ஆளும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்களையும் காரியாலயத்துக்கு அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர்,

எம்பிலிபிட்டிய நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள், இந்த நகர சபையின் செயற்பாடுகள் காரணமாகப் பாதிப்படைந்துள்ளன என்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், நகர சபையின் சில உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு, பிரச்சினைகளைச் சுமூக நிலைக்குக் கொண்டு வருவதற்கு, நகர சபைக்கு காலக்கெடு விதிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மூன்றுமாத காலப்பகுதிக்குள், நகர சபையின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிடின், எம்பிலிபிட்டி நகர சபையின் நிர்வாகத்தைக் கலைத்து, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .