2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து விபத்துக்களில் 55பேர் காயம்

Kogilavani   / 2015 ஜூன் 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு, மு.இராமசந்திரன், எஸ்.செல்வராஜா, கு.புஷ்பராஜா

மலையகத்தின் வெவ்வேறு பகுதிகளில்  நேற்று செவ்வாய்க்கிழமையும்   திங்கட்கிழமை மாலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் 55 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை- லோகி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸூம் நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த பௌசரும் நேருக்கு நேர் மோதிகொண்டதில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.   இதேவேளை இவ்விபத்தை பார்வையிடுவதற்காக காரில் சென்றபோது முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாத்தளையில் லொறியும் பஸ்ஸூம் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தானது திங்கட்கிழமை(15) மாலை இடம்பெற்றுள்ளது. இரு வாகனங்களும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிகொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாத்தளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேஷமூர்த்தி பயணித்த கெப் ரக வாகனமானது, மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-பதுளை வீதி அசலக எனும் இடத்தில் திங்கட்கிழமை (15) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  லக்ஷபான பகுதியில் காரொன்று பாதையை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் அதில் பயணித்த அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையொருவர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X