2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

69 இலட்சம் மக்களே இதற்கு காரணம்

Freelancer   / 2022 மார்ச் 04 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைக்கு காரணம் ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கமோ அல்ல. வாக்களித்த  69 இலட்சம் மக்களே. அந்த வாக்குகளை பயன்படுத்தியே 20வது திருத்த சட்டம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இவை அனைத்தையும் அரசாங்கம் சாதித்து கொண்டது.

வாக்களித்த மக்கள் மாத்திரம் அல்ல. வாக்களிக்காத ஒரு கோடியே ஐம்பதாயிரம் மக்களும் இன்று துர்ப்பார்க்கியமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தலைவலிக்காக தலையணை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது. இதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா ? இதனையும் அரசாங்கம் அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றது.

உண்மையை பேசிய சுசில் பிரேமஜயந்த வெளியேற்றப்பட்டார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் அரசாங்கம் உண்மையை பேசுபவர்களை பழி வாங்குகின்றதா அல்லது உண்மையை பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஏனைய அமைச்சர்களை அச்சுறுத்துகிறதா.

டீசல் இல்லாத காரணத்தினால் பெருந்தோட்டத்துறை தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை, மின்சார துண்டிப்பால் ஆடை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி டீசல் இல்லாத காரணத்தினால் முழு இலங்கையுமே பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் இருக்கின்றது.

ஜனாதிபதியின் வெற்றியை பாற்சோறு சமைத்து கொண்டாடியவர்கள் இன்று பெற்றோல் பவுஸர் வருவதையும் கேஸ் வருவதையும் பார்த்து பாற்சோறு பொங்குகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசாங்கம் ஜெனிவாவில் யுத்த குற்றச்சாட்டுகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் முகங்கொடுத்து வந்த நிலையில் இன்று புதிதாக அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களுடைய முறைபாடு, ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களாக ஹரின் பெர்ணாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோரின் முறைபாடு என பல புதிய பிரச்சினைகளை அரசாங்கம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X