2025 ஜூன் 25, புதன்கிழமை

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை காப்பாற்றுங்கள்

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

தற்போதைய அரசாங்கத்தின் மீது, தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உடைக்கக்கூடாது. தமிழ் மக்கள் என்ன நினைத்து, ஜனாதிபதிக்கு வாக்களித்தார்களோ அது நடக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

கோப்பாய் சந்தியில் இருந்து கைதடிக்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை, நிரந்தர இராணுவ முகாம் அமைப்பற்காக அப்பகுதியிலிருந்த 1 ½ ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடும் செய்ய திங்கட்கிழமை (14) எடுக்கப்பட்ட முயற்சியானது, காணி உரிமையாளர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களாக சோமசுந்தரம் சுகிர்தன், ஆ.பரஞ்சோதி, பா.கஜதீபன் ஆகியோரது எதிர்ப்பு நடவடிக்கையால் கைவிடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் கஜதீபன் கருத்துக்கூறுகையில், 'மேற்படி பகுதியில் 28 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றில் 1 ½ ஏக்கர் காணியை இராணுவ முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்ய திங்கட்கிழமை (14) முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, காணி உரிமையாளர்கள் மூவரும் வடமாகாண சபை உறுப்பினர்களும் அங்கு சென்று காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தினோம். காணி அளவீடு செய்ய வருகை தந்திருந்த நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்' என்றார்.

'காணாமற்போனோர், அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் இராணுவத் தேவைக்காக சுவீகரித்தல் ஆகிய செயற்பாடுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட அநீதியான நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்' எனச் சுட்டிக்காட்டினார்.

'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படவேண்டும் என்ற நோக்குடன் மக்கள் வாக்களித்தனர். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியால் கடந்த 8 மாதங்கள் கடந்தும் தமிழ் மக்கள் சார்பாக எந்தவொரு சிறிய நகர்வும் மேற்கொள்ளவில்லை. ஜனாதிபதி, அரசாங்கம் மீது தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டும்.

அதனை பலவீனப்படுத்தும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளக்கூடாது. நல்லாட்சியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .