2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆசிரியைகளின் வீட்டுக் கதவை இராணுவத்தினரே தட்டினர்: சுரேஷ்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

முழங்காவில் மகா வித்தியாலய ஆசிரியைகள் தங்கியிருந்த வீட்டுக் கதவை, அருகிலுள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர், இரவு வேளைகளில் தட்டுவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மேற்படி பாடசாலையின் ஆசிரியர் விடுதிக்கு அருகிலுள்ள 10 ஏக்கர் தனியார் காணியை, இராணுவம் பிடித்து வைத்துள்ளது. அதில் முகாம் அமைத்துள்ளதுடன், அங்கு விவசாய நடவடிக்கையிலும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இரவு வேளையில், விடுதி வேலியைப் பிரித்து உள்நுழைந்த இராணுவத்தினர், ஆசிரியைகள் தங்கியிருந்த விடுதியின் கதவைத் தட்டியுள்ளனர். ஆசிரியைகள் கூக்குரலிட, அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். 

இது தொடர்பில், முழங்காவில் பிரதேச இராணுவ பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர் அங்கு சென்று பார்வையிட்டுள்ளார். பிரிக்கப்பட்ட வேலியை அடைத்துத் தருவதாகவும் அந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரை இடமாற்றம் செய்வதாகவும் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். ஆனால், இன்றுவரை வேலி அடைக்கப்படவில்லை என்றார்.

'இந்தப் பாடசாலைக்கு, மேலதிக காணி தேவையாகவுள்ளது. இராணுவம் இருப்பது, பொதுமக்களுக்குச் சொந்தமான காணியிலாகும். இராணுவம் தொடர்ச்சியாக அந்தக் காணிகளில் இருப்பது பிரச்சினையாகும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இடத்தில் இராணுவம் இருக்கலாம். ஆனால், பாடசாலைகள், ஆலயங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் ஏன் இராணுவத்தினர் இருக்க வேண்டும்?

இராணுவம் வடக்கில் தொடர்ந்து இருப்பது பல்வேறு அச்சுறுத்தல்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றன.

எனவே, அரசாங்கம் இராணுவத்தினரை உடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X