2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இளைஞர் சுட்டுப்படுகொலை : புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு பிணை

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 22 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல யாழ். மேல் நீதிபதி அனுமதி அளித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம், வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி யாழ் பொலிஸ் விஷேட அதிரடிப்படை புலனாய்வாளர்களான மல்லவ ஆராய்ச்சிகே பிரதீப் நிசாந்த மற்றும் ரத்நாயக்க முதியான்சலாகே இந்திக புஸ்பகுமார ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்நிலையில், குறித்த இரு சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி மோகனதாஸ் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் பிணை விண்ணப்பம் செய்தார்.

அதன்போது, குறித்த இரு சந்தேக நபர்களையும் கண்கண்ட சாட்சியம் நீதிவான் நீதிமன்றில் அடையாளம் காட்டவில்லை. அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கியும் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட வெற்று தோட்டாக்களும் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தன. அவற்றை பகுப்பாய்வு செய்த அதிகாரிகள், குறித்த கைத்துப்பாக்கியில் இருந்து தான் குறித்த தோட்டாக்கள் சென்றது என்பதனை அறுதியாக கூற முடியாது உள்ளது. என நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.

எனவே சந்தேகநபர்கள் இருவரையும் தகுந்த பிணை நிபந்தனையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரினார்.

அதனை அடுத்து அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த், குறித்த வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு உள்ளதாக குற்றபுலனாய்வு பிரிவினர் அவதானிப்புக்களை அறிய தந்துள்ளார்கள். அந்த அவதானிப்புக்களின் பிரகாரமும், எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும் சந்தேக நபர்கள் பிணையில் செல்வதுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

அதனை அடுத்து நீதிபதி இருவரையும், தலா 50 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும், இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு ஆட்பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

அத்துடன் சந்தேகநபர்கள் இருவரும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் காலை 09 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் கையொப்பம் இட வேண்டும். கடவுச் சீட்டு இருந்தால் அதனை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படுகின்றது என நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த நீதிமன்ற கட்டளையை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .