2025 ஜூன் 25, புதன்கிழமை

ஏமாற்று வேலையை தமிழரசுக் கட்சியின் தலைமை அறியவேண்டும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் இலங்கை இல்லாத நிலையில், எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக் கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், சனிக்கிழமை (12) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'தேர்தல் முடிந்தவுடன் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால், பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தற்போது இரண்டு கட்சிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக இணைந்து அமைச்சரவையை உருவாக்கி அதற்கு தேசிய அரசாங்கம் என்கின்றனர். ஆகவே, இதனூடாக பல விடங்களை அவர்களால் சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதற்கும் அப்பால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக வந்துள்ளார். ஆகவே மாற்றங்கள் என்பது பல்வேறு விதத்திலும் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது அதனை எவ்வாறு கையாள்வது போன்ற பல பிரச்சினைகளும் எமக்கு முன்னால் வந்துள்ளன.

சர்வதேச விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்கா தற்போது உள்நாட்டில் இலங்கை அரசுடன் சேர்ந்து ஒரு பொறிமுறையை உருவாக்குவோம் என்று கூறுகின்றது. உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வு எட்டமுடியுமா என்பதே தற்போதைய கேள்வி.

இலங்கையின் அரசியல் சாசனத்தில் இவ்வாறான விடயத்துக்கு எந்தவிதமான அம்சங்களோ சரத்துக்களோ இல்லை. இலங்கையில் உள்ள சட்டம் ஒன்றிரண்டு கொலைகளை செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவே உள்ளது. மனிதப் படுகொலையை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் அரசியல்சாசனத்தில் இடம் இல்லை.

உள்நாட்டில் விசாரணை மேற்கொள்வது என்பது காலத்தை விரையமாக்கி குற்றச்செயலை மக்கள் மறந்துபோகக்கூடிய சூழலை உருவாக்கி இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை தோற்றுவிக்க, உள்ளக விசாரணை வழிவகுக்குமே தவிர இதனால் வேறு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவேண்டும் என்றும் இவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .