2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சர்வஜன வாக்குரிமை தொடர்பில் குறுந்திரைப்பட விழா

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழுவின் 2017 - 2020 மூலோபாயத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஜனநாயகம் தொடர்பாக சமூக கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்காக களணி பல்கலைகழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஜனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக “பௌர” என்ற பெயரில் குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த குறுந்திரைப்பட விழாவின் நோக்கமாக, ஜனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வஜன வாக்குரிமை தொடர்பாக பொது மக்களிடத்தில் புரிந்துணர்வை மேம்படுத்தல் ஆகும். 

குறித்த விழாவில் திரையிடப்படுவதற்கான குறுந்திரைப்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளன, குறித்த போட்டிக்கு மும்மொழி குறுந்திரைப்படங்களை சமர்ப்பிக்க முடியும். ஒவ்வொரு குறுந்திரைப்படமும் 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுடன், அவை எச்.டி தரத்தில் இருக்க வேண்டும்.

இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. திறந்த பிரிவில் முதலிடத்திற்கு 125 ஆயிரம், இரண்டாமிடத்திற்கு 75 ஆயிரம், மூன்றாமிடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

பாடசாலை பிரிவில் முதலாமிடத்திற்கு 50 ஆயிரம், இரண்டாமிடத்திற்கு 30 ஆயிரம்,  மூன்றாமிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

போட்டியில் கலந்து கொள்வதற்கான குறுந்திரைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித்திகதி எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள்  எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தரங்கனி திரையரங்கில் திரையிடப்படும் அன்றைய தினமே பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்கால நிகழ்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான இணக்கத்தை பெற்றுக்கொள்வோம் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X