2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், க. அகரன்

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று (04) இடம்பெற்ற நிலையில், கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம், இன்று(04) 339ஆவது நாளாகவும் தொடர்கிறது. நிலையில், போராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து, பரண் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.

மேலும், “பூர்வீக மக்கள் அகதி வாழ்வில் வரும் நிலையில், ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவா? இதனை நாம் எதிர்க்கிறோம், வெறுக்கிறோம்” எனவும் தெரிவித்தனர்.

கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள், கடந்த வருடம் டிசெம்பர் 28ஆம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த காணிகளுக்குள் கடந்த 1ஆம் திகதி மக்கள் சென்றனர். இந்நிலையில், இன்னும் தமது காணிகளில் விடுவிக்க வேண்டியுள்ள 104 குடும்பங்களுக்குச் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து இன்று (04) 339ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (04) இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் இடம்பெற்ற நிலையில், சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் எனத் தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் எனக் கூறி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர், பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார்.

அவரது போராட்டம் இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்புப் போராட்டத்மையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரத போராட்டத்தையும் முன்னெடுத்தார்.

இதேவேளை, “இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது” எனத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .