2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம் பொலிஸ் காவலில் கொலை: 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக்குளத்தில் போட்ட வழக்கின் சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.

இதேவேளை, இது தொடர்பான வழக்கு, மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 19ஆம் திகதியன்று, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதால், அன்றைய தினத்தன்று  இவர்களை, மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் பணித்தார்.

இந்த வழக்கில், 5 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களில் ஒருவர் கடந்த 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஏனைய 4 பேருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய, சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவரை நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்தனர். அவர்களை இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, நான்காவது சந்தேகநபரும் மன்றில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி, ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் பொலிஸார் கைது செய்து இருந்தனர். அது தொடர்பான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று, குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளபட்ட போது, குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர்கள், மன்றில் ஆஜராகி இருந்தனர். அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.

தம் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்தி சுன்னாக பொலிஸார் கைது செய்தனர் எனவும் கைது செய்த பின்னர் தம்மை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும், அதன்போது, தம்முடன் கைதாகியிருந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் தமது நண்பன் சித்திரவதை காரணமாக உயிரிழந்ததாகவும், பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இந்தச் சம்பவம் 2011 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றதாகவும் கூறினர்.

மேலும், உயிரிழந்த தமது நண்பனின் உடலை கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் வீசி விட்டு, தமது நண்பன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என, பொலிஸார் தெரிவித்ததாக நீதவானிடம் தெரிவித்தனர்.

அப்போது சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார என்பவர் தலைமையிலான மூன்று தமிழ் பொலிஸார் உட்பட எட்டு பேர், இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என, பொலிஸாரின் பெயர் குறிப்பிட்டு மன்றில் வாக்குமூலம் அளித்தனர்.

அதனை அடுத்து, அவ்விளைஞர்கள் பெயர் குறிப்பிட்ட பொலிஸார் அனைவரையும் கைது செய்யுமாறும், மூன்று மாதகால பகுதிக்குள் பூரண விசாரணைகளை முன்னெடுத்து, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், 5 பொலிஸ் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, குற்றப்புலனாய்வுப் பொலிஸார், (சடலம் கண்டெடுக்கப்பட்டமை கிளிநொச்சி என்ற அடிப்படையில்) கிளிநொச்சி நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்தனர். இதனடிப்படையில் சந்தேகநபர்களான பொலிஸார், கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X