2025 ஜூன் 25, புதன்கிழமை

நல்லூர் திருவிழாவில் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுக்கு வந்த நிலையில் 11ஆம் திகதி இடம்பெற்ற தேர் திருவிழாவில் தங்க நகைகளைக் களவாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.கே. வூட்லர் தெரிவித்தார்.

அத்துடன் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் எனவும் கடந்த காலங்களை விடவும் இம்முறை திருட்டுச் சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன எனவும் அவர் கூறினார்.

நல்லூர் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றிருந்த நிலையில் பெருமளவு நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் திருடர்கள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் -ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், 'கொழும்பு வத்தளை, ஹெரவலபிட்டிய பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுமாக 3 பெண்கள், தேர் உற்சவத்தில்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சில தங்க ஆபரணங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஆனால், பல பவுண் நகைகள் திருடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின்றது. ஆனால், அவை உண்மையில்லை.

கடந்த காலங்களை விடவும் இம்முறை திருட்டுச் சம்பவங்கள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றிருக்கின்றன.

இதற்குக் காரணம் பொலிஸார் வழங்கிய பாதுகாப்பும் பொது மக்களின் ஒத்துழைப்பும் தான். அத்துடன் உதவியமைக்கு ஊடகங்களுக்கும் நன்றி. மேலும், யாழில் உள்ள சில ஊடகங்கள் தகவலை உறுதிப்படுத்தாது வெளியிடுகின்றன. அதனைத் தவிர்க்குமாறும் தகவலை உறுதிப்படுத்தி பிரசுரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி நடவடிக்கைக்காக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .