2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பதுங்கு குழியில் மறைந்திருந்து கொள்ளை : இருவருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 25 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுங்கு குழியில் மறைந்திருந்து, கொள்ளையில் ஈடுபட்ட இருவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்று (24) உத்தரவிட்டார்.

யாழ் - மன்னார் பிரதான வீதியில் கேரதீவு பகுதியில், சந்தேகத்துக்கு இடமான முறையில், ஒருவர், பல உணவு பொதிகளுடன் செல்வதை சிவில் உடையில் நின்ற பொலிஸார் ஒருவர் அவதானித்து, குறித்த நபரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அந்நபர், மறவன்புலவு பகுதியில் உள்ள பதுங்கு குழி ஒன்றினுள் செல்வதனை அவதானித்து, அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் தகவல் தெரிவித்து உள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், பதுங்கு குழியில் இருந்த நபர்கள், அருகில் இருந்த கடல் நீரேரி ஊடாக தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களை துரத்தி சென்ற பொலிஸார் இருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து, பதுங்கு குழியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரை பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் நாவற்குழி மற்றும் அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் என்பன கேரதீவு வீதியில் உள்ள வீடொன்றிலும், நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றிலும் கொள்ளையிடப்பட்டவை என தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, இரு சந்தேக நபர்களையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .